நிலவே நீ நலமா நினைவே நீ சுகமா

நிலவே நீ நலமா..
நினைவே நீ சுகமா..
நிலம் போல் தாங்கிடவே
துணையே வருவாயோ?..

உயிரும் உனக்கன்றோ
நின் உடலும் உனக்கல்லோ..
உதிரம் நிறைத்திருக்கும்
செங் கலமும் நீயன்றோ...

உன் வருகை எதிர்பார்த்தே
வழி மேல் விழி விரித்தேன்..
எனை நீ மறப்பாயோ,..
எனதன்பை மறுப்பாயோ?..

உனக்கே உயிரானேன்..
உன் நினைவில் மெழுகானேன்...
உலகே எதிர்த்தாலும்
நின் உரிமை உனக்கன்றோ!..

வாழும் ஆசை அதை
வரமாய் அளிப்பாயோ...
மனதை அரித்தெடுக்கும்
மரண வலியை ஒழிப்பாயோ?..

ஆயிரம் குறுந்தகவல்
அடியேன் நான் அனுப்பியும்
நீண்ட மௌனம் ஏனோ,
நீயும் கல்நெஞ்சன் தானோ?..

பாவைக்குள் ஆயிரம்
பூவை விதைத்தவன்
பாராமுகம் காட்டி எனை
பாலை ஆக்குவதேன்?..

பாறைக்குள் ஒரு
உளியாய் வந்தவன்
உதாசினம் காட்டி எனை
உடைத்து நொறுக்குவதேன்?..

கடக்கும் நேரங்களிலெல்லாம்
காத்திருக்கிறேன் உனக்காய்,..
நிலவே நீ நலமா?..
நினைவே நீ சுகமா?..

எழுதியவர் : கவிப்_பிரியை_shah (22-Jul-17, 11:04 am)
சேர்த்தது : Shahmiya Hussain
பார்வை : 53

மேலே