இனி

பூட்டிவைத்த இதயத்தின் பூட்டையே காணவில்லை அன்பே உன்னால்...
திருடிய என் இதயத்தை ஒருமுறை புரட்டிபோட்டு வாசித்துதான் பாரேன்...
என் உதடுகள் சொல்லாததை
அது சொல்லும்...
என் மௌனம்கூட மெல்ல பேசும்...
என் முகவரிக்கு தவறாமல் வந்து விழும் உந்தன் விழிகடிதங்களால்,
நாள்தோறும் கூடுகிறது
உன் இம்சையின் யுத்தங்கள்...
என்று...என்று...
நான் காத்திருக்கையில்,
இன்று...இன்று...
உன் பார்வை பத்திரம் எழுதி
பதிவு செய்கிறது இது காதல்தான் என்று...
சம்மதம் என்னும் பதிலை எப்படி சொல்வேன் துணிந்து...
வேண்டுமானால் கவிதையால் சொல்லட்டுமா???
இனி...
நீ வேண்டும் இனி...
கனவுகளும் விழிக்கட்டும் இனி...
கண்கள் தேடும் இடமெல்லாம் நீ வேண்டும் இனி...
நேரங்கள் உறையட்டும் இனி...
நேரங்காலம் பாராமல் உருக நீ வேண்டும் இனி...
பகல்களும் தூங்கட்டும் இனி...
பக்கத்தில் எந்நேரமும் நீ வேண்டும் இனி...
நாணமும் கதைசொல்லட்டும் இனி...
நான் சிணுங்கும் போதெல்லாம் நீ வேண்டும் இனி...
பேராசைகள்மட்டும் நிறைவேறட்டும் இனி...
பேரம்பேசி என்னுயிரை வாங்க நீ வேண்டும் இனி...
வானவில்லும் தோரணமாகட்டும் இனி...
வாடி நானும் போகாமலிருக்க நீ வேண்டும் இனி...
தற்காலிகமெல்லாம் தங்கிவிடட்டும் இனி...
தள்ளி போகாமல் நிரந்தரமாய் நீ வேண்டும் இனி...
நிலவும் தேய்ந்தேகிடக்கட்டும் இனி...
நித்தமும் வளர்பிறையாய் நீ வேண்டும் இனி...
உயிரும் உயிலெழுதட்டும் இனி...
உணர்வாய் என்னில் புதைய நீ வேண்டும் இனி...
எரிக்கின்றதீயும் குளிரட்டும் இனி...
என் கவிதையின் புலம்பல்களில் நீ வேண்டும் இனி...
மூச்சுக்காற்றும் முடங்கட்டும் இனி...
மூன்றுமுடிச்சிட்டு எனை அலங்கரிக்க நீ வேண்டும் இனி...
அன்பே,
உன் பேரும் என் பேரும் மட்டுமே தனி தனி...
உன்னில் வாழ பிறவிகள் ஏழெடுப்பேன் நான் இனி...
#கவிதையில் கற்பனை மட்டுமே!!!
@ஸ்ரீதேவி