தமிழ்நாடென்ன சுடுகாடா

தமிழ்நாடா? சுடுகாடா?

தமிழ்நாடென்ன சுடுகாடா!!
வந்தவனெல்லாம் வாய்க்கரிசி போட...

கலாச்சாரம், பண்பாடு
காக்கவேண்டி எங்கள்
மாணவர்களெல்லாம்
மீனவர் கரையில் கூடினால்...
காவல்துறை சிலரின்
ஏவல்துறையாய் மாறி தங்கள்
காக்கியுடை அதிகாரத்தில்...
தாக்கி விரட்டினர் மாணவர்களை...!

தமிழ்நாடென்ன சுடுகாடா???

நெடுவாசல் தொடங்கி ஒவ்வொரு
வீடுவாசலையும் சேர்த்தழிக்கும்...
எரிவாயு என்னும் பெயரில்
எமனை இழுத்துவரும் திட்டமிது...
குடிநீரோடு மட்டுமன்றி விவசாயிகள்
குலத்தையும் சேர்த்தழிக்குமே என்று
புலம்பும் பொதுமக்களின் போராட்டத்தை
புறக்கணிக்கும் மத்திய, மாநில அரசுகளே...

தமிழ்நாடென்ன சுடுகாடா???

சாதித்த மாணவியை...
சோதித்த அரசே!
சிகிச்சையளிக்கும் படிப்பிற்காக
சிந்தித்தாள் அவள் எப்போதும்... அரசு
சீரழித்தது அவள் கனவை...
திரும்ப தருமா ஒரு போதும்...
அவளுயிரை திரும்ப தருமா ஒரு போதும்...

தமிழ்நாடென்ன சுடுகாடா???

ஏய்த்து பிழைக்கும் கூட்டம்
நல்ல உயரத்துக்கு போகுது...
மாய்ந்து மாய்ந்து படிச்ச உயிர்
ஒவ்வொன்றாய் சாகுது...
கனவுக்காக தொலைத்த உயிர்
கடைசியாக இருக்கட்டும்... ”நீட்”-ஐ
கடைசி வரையும் எதிர்த்து நிற்போம்...
கவனத்திலே இருக்கட்டும்...

தமிழ்நாடென்ன சுடுகாடா???

மீனவனை அடித்தபோதும்
கேட்கவில்லை...
மீனவனை சிறைபிடித்தபோதும்
கேட்கவில்லை...
மாணவர்களை அடித்தபோதும்
கேட்கவில்லை... இன்று,
மீனவனை கொல்கிறான்...
மாணவனையும் கொல்கிறான்...!

வேடிக்கை விடுத்து தமிழா!
இனியும் நீ வாய்திறக்காவிடில்...
இல்லாமலே போகும் உன் இனம்...
பிறகு இது
தமிழ்நாடென்றில்லாமல்...
தமிழனின் சுடுகாடென்றே
ஆகிப்போகும்...

தமிழ்நாடா?? சுடுகாடா???

எழுதியவர் : மணிகண்டன் குடவாசல் (4-Sep-17, 11:54 pm)
பார்வை : 1862

மேலே