விரிந்த காவிரி

ஊர் சென்று திரும்பினேன் ! எங்கள் காவிரி ஆற்றைப் பாடத் தோன்றியது....

அறுசீர்க் கழிநெடிலடி விருத்தம்

உடம்பிடை ஊறு கின்ற
உதிரமே அனித்து ! நாட்டோர்
தடம்பதி வயல்வ ரப்பின்
தடத்தினிற் பரிசென் றாகி
முடவனின் கையில் தேனாய்
முழுசெழும் பரப்பு தாங்கிக்
கடமையைச் செய்வ தற்காய்
காவிரி விரிந்த தன்றே !

நிலமகள் அணிந்த பட்டு !
நீர்நிலை அணிந்த மின்னும்
உலகமே அணிந்த செம்மை
உணர்வுகள் அணிந்த பாசம் !
மலரிதழ் அணிந்த மட்டு !
மானினம் அணிந்த புள்ளி !
கலைகளை அணிந்த நாட்டில்
காவிரி விரிந்த தன்றே !

சேலொடு தங்கம் வெள்ளி
சேர்பல ஓலைக் கல்வி
வேலரும் வாளும் ஏந்தி
வேதனை தீர்ம ருந்துச்
சாலையென் றாகிச் சாதி
சமநிலை காட்டி ! வெய்யோன்
காலையின் ஒளியைப் போன்று
காவிரி விரிந்த தன்றே !

கரையிலே அலையின் முத்தம்
கடலிலே நதியின் முத்தம் !
நுரையெலாம் மருந்தின் முத்தம் !
நூதனச் சுழலின் முத்தம் !
வரையிலே நெல்லின் முத்தம்
வனப்பெழும் முத்தம் ! என்றே
கரங்களை அகல நீட்டிக்
காவிரி விரிந்த தன்றே !

காவிரி பாயும் சத்தம் !
கடவுளர் வேதச் சத்தம் !
பூவிருந் துண்ணும் வண்டின்
புதுவிதச் சத்தம் ! நாட்டுக்
காவலர் ஆர்க்கும் சத்தம் !
கவிதைகள் கேட்கும் சத்தம் !
மேவிடப் பரந்து வாழும்
மேன்மிகு நதியே வாழி !!

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (13-Sep-17, 8:11 pm)
Tanglish : virintha kaaviri
பார்வை : 81

மேலே