நீயும் பாடுவாய் இந்த காதல்தாசனாய்

" ஓருடல் இரு உயிர் புகுந்தால் எவ்வுயிர் அவ்வுடலை ஆதிக்கம் செய்யுமோ?
அன்பே! ஈருடலில் ஓருயிரென்றானாய் என்னோடு நீ கொண்ட பந்தத்தினாலே...", என்று பாடிக் கொண்டிருந்தான் காதல்தாசன்...

" ஓ! அன்புடை நண்பா காதல்தாசா! புது காதல் காவியம் செப்பிடும் கனிந்த சொற்களால், பாடும் விந்தைபுரியும் இவ்வித்தையை எங்கு கற்றாயோ?. ", என்றேன் நான்...

" கேளாய் மித்திரா! கனிந்த உள்ளங்களின் காதல் சுவையை அள்ளிப் பருகி ஆனந்தமாய் அனுபவித்து பாடினால் பயிலா இவ்வித்தை கைகூடுமே. ", என்று பதில் கொடுத்தான் காதல்தாசன்...

" ஓ காதல்தாசா! நான் கண்ட காதலெல்லாம் கண்ணிமைக்கும் நொடியில் மறைய, நீ சொல்லும் கனிந்த உள்ளங்களின் காதல் சுவை அறிவதுமேது?. ", என்ற வினாவை ஏவினேன் நான்...

" கனிந்த உள்ளங்களின் காதல் கண்களுக்குப் புலப்படாத ஈர்ப்பினால் இரு இதயங்களும் ஒன்றுபட சமர்ப்பணமாகிய காதலர்களிடம் வளர்ந்து மரணத்திலும் துண்டுபடாது உடல்கள் மாய்ந்தாலும் ஒன்றுபடும் உன்னதமாய் இலக்கியமாய் ஒழுக்கநெறியாய்.
காலம் வரும்.
காதல் ஞானம் தரும்.
நீயும் வரிகளைப் புனைந்து கவிதையாய் பாடுவாய் இந்த காதல்தாசனாய்... ", என்றவன் சிரித்துக் கொண்டே காற்றில் கலந்து சுவாசமானான்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (26-Sep-17, 8:47 pm)
பார்வை : 303

மேலே