உண்மைகள்

வேகம் காட்டி ஏறிய மாடிப்படிகள் மாறாதிருக்க,
படிகள் கடக்க, கால்கள் நோகுது, கால தாமதமாகுது.
காலம் மாறி வயது கூடியதால் தேகம் காட்டுது மாற்றம்.
உடலது நிலையும், மனதது உணர்வும் நாளும் மாற ,
தொடர் வேலைகள் மலைக்க வைக்குது,மறக்கச் செய்யுது.
நின்று, நிதானம் காத்தல் நிலைமையை மாற்றுமே!

ஊருக்கு பயணம், ஏற்பாடுகள் என்பது இயல்பு,
புறப்பட்டவுடன் ஊர் போய் சேர வேண்டுமென நினைப்பது பதற்றம்.
பதற்றம் தருவது பலவீனம், அத்தோடு சேர்வது உடல் சுகவீனம்.
அவசரம் என்றும் அள்ளித் தெளித்த கோலம்,
மாறாமல் இருந்தால் அலங்கோலம்.
பொறுமை என்பதே புரிதல் ஆகும்.

பெரியவர்களுக்கும், உரியவர்களுக்கும்
கொடுக்க வேண்டியது மரியாதை.
எல்லாம் அறிவோம் என்றிருப்பது அகங்காரம்,
அடக்கம், அமைதி பெற்றுத் தருவது உயரிய அங்கீகாரம்.
உதவி கண்டபோது உடன் கை கொடுப்பது பெரும் உபகாரம்.
மானம் காப்பது சுய உரிமை!

வாழ்வென்பது வளமேயென்றானால்,
நலமென்பதே நாட்டின் நிலையென்றாகும்.
பிழையென்பதை ஏற்கும் மனம் கொண்டால்
பிரிவு என்பதே இல்லாமல் போகும்.
எல்லோரும் நலம் பெறவே நல்ல மனம் கொண்டால்,
செயல் அனைத்தும் என்றும் சிறப்பாகும்.

எழுதியவர் : arsm1952 (11-Oct-17, 11:10 pm)
Tanglish : unmaigal
பார்வை : 301

மேலே