சிநேகிதனே -அத்தியாயம் - 10
......சிநேகிதனே.....
அத்தியாயம் : 10
சூப்பர் மார்க்கெட்டினுள் நுழைந்ததுமே முதலில் யாருக்கு என்ன வாங்குவதென்று ஒரே குழப்பமாக இருந்தது..அதைவிட முன்னைய நாட்களில் அவனோடு பொருட்கள் வாங்கிய நினைவுகள் வேறு என்னை இம்சிக்கத் தொடங்கியிருந்தன ...இந்த இரண்டுக்குமிடையே நான் குழம்பித் தவித்துக் கொண்டிருந்த வேளையில்தான்,பின்னாலிருந்து அவனது குரல் கேட்டது...
"என்ன வாசலிலேயே நின்னு மொத்த கடையையும் பார்த்திட்டு இருக்க...கடையையே விலைக்கு வாங்கப் போறியா என்ன...??.."
அவன் கேட்ட கேள்வியை விடவும்,அவன் ஏன் வந்தான் என்பதே என்னைக் குடைந்தது...
"வரலைன்னு சொன்ன..."
"அப்போ ஏன் வந்தாய்ன்னு கேட்குறியா...??."
"நான் அப்படிச் சொல்லல.."
"ஓஓ....அப்போ வேற எப்படிச் சொன்னீங்களாம் மேடம்..?."
"நான் எப்படியும் சொல்லல...ஆளை விடு சாமி..."என்று அவன் முன்னே இரண்டு கைகளையும் குவித்து கும்பிடு போட்ட நான்,பழங்களிருந்த பகுதியை நோக்கி விரைந்தேன்...
ஆனாலும் வாய் அதன் போக்கில் முணுமுணுக்கத் தொடங்கியது..
"வரலைன்னு சொல்லிட்டு வந்து நின்னா ஏன்னு கூட கேட்க மாட்டாங்களா...?அது ஏதோ பெரிய குத்தம்னு அதைப் பிடிச்சு தொங்கிக்கிட்டு..."
"நீ முணுமுணுக்கிறது இங்க நல்லாவே கேட்குது...என் மேல இருக்கிற கோபத்தை மாம்பழத்து மேல ஒன்னும் காட்டிடாத..."
அவனைத் திரும்பி லேசாக முறைத்த நான்,
"மாம்பழத்துக்கு ஒன்னும் ஆயிடக்கூடாது...ஆனால் காதலிச்ச பொண்ணோட மனசு மட்டும் என்ன ஆனாலும் பரவாயில்லை..."என்று மனதில் மட்டுமே பொருமிக் கொண்டேன்..
ஆனால் அவன் அதற்கும் பதில் தந்தான்...
"மனுசங்களோட மனசையும் எனக்கும் புரிஞ்சுக்கத் தெரியும் மித்ரா...ஆனால் சிலர் தான் புரிஞ்சும் புரியாத மாதிரி நடந்துக்கிறாங்க.."என்று எனை ஏதோ உள் அர்த்தத்தோடு நோக்கியவன் சிறிது தூரம் விலகி நின்றான்...
அவனது அம்மாவிற்கென பழங்களை வாங்கிக் கொண்ட நான்,ஆரு குட்டிக்கு பொம்மையொன்றையும்,சொக்லேட்களையும் வாங்கிக் கொண்டேன்...
அவனது மனைவிக்கு என்ன வாங்குவதென்று குழப்பமாக இருக்க,வேறு வழியின்றி அவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று அவனருகே சென்ற நான்,
"உன்னோட மனைவிக்கு என்ன பிடிக்கும்..?"
அவன் சிறிதும் யோசிக்காமல்...
"என்னைத்தான் பிடிக்கும்..."
அதுவரை நேரமும் இருந்த இதம் எங்கோ காணாமல் போக அவனது பதிலில் கண்களோரமாய் கண்ணீர்த்துளிகள் முட்டி மோதத் தொடங்கின...அவன் அறியாமல் திரும்பி நின்று அதைத் துடைத்துக் கொண்ட நான்..
"நான் அதைக் கேட்கல....உன் வைவ்க்கு எந்த ஐயிட்டம்ஸ் ரொம்ப பிடிக்கும்னு கேட்டேன்..."என்று இயன்றவரை அழுகையை அடக்கிக் கொண்டே கேட்டேன்,
நான் கேட்டதும் வாங்கியிருந்த பொருட்கள் மீது பார்வையைச் செலுத்தியவன்,
"அவளுக்கு சொக்லேட்ஸ்னா ரொம்பப் பிடிக்கும்....நீதான் அதை ஏற்கனவே வாங்கிட்டியே....இனி நாம கிளம்பலாமா...?.."
"ம்ம்..."
பொருட்களுக்கான பணத்தைச் செலுத்திவிட்டு நான் வெளியே வரவும் அவன் பார்க்கிங்கில் இருந்து காரை எடுத்திருந்தான்...
அதன் பின் அவனது வீட்டைப் போய்ச் சேரும் வரை மீண்டும் எங்கள் இருவரையும் மௌனமே ஆரத் தழுவிக் கொண்டது..
அவனது வீட்டிற்கு இதற்கு முன்னும் பல தடவைகள் வந்துள்ளேன்...ஆனால் அப்பொழுதெல்லாம் எனக்குள் எழாத தயக்கம் இப்போது மட்டும் எனக்குள் எழுந்து எனை பாடாய்ப்படுத்தியது..
காரை விட்டு இறங்கியதுமே வீட்டை நன்றாகப் பார்த்தேன்...முதல் இருந்ததிற்கு இப்போது அவனது வீடு பல மாற்றங்களைக் கண்டிருந்தது...
எனது கால்கள் லேசாக நடுங்கத் தொடங்கியிருந்தன...அது ஏனேன்று எனக்கே சரிவரத் தெரியவில்லை...
காரின் சத்தம் கேட்டதுமே வெளியே எட்டிப் பார்த்த அவனது அம்மா..என்னை ஓடி வந்து கட்டிக் கொண்டார்...
அந்த அணைப்பினில்தான் எவ்வளவு அன்பு கொட்டிக் கிடந்தது...இதையெல்லாம் உதறித்தள்ளிவிட்டா நான் சென்றேன் என்று என் மனம் கேட்டுக் கொண்டது...ஆனாலும் எனக்குத்தான் வேறு வழி இருக்கவுமில்லையே...
"எப்படிம் மா இருக்க...??பார்த்து எத்தனை வருசமாச்சு...?.."
"நான் ரொம்ப நல்லாயிருக்கேன் மா...நீங்க எப்படி இருக்கீங்க...?.."
"எனக்கென்னமா கடவுள் புண்ணியத்தில ரொம்ப நல்லாவே இருக்கேன்..."
"இப்போதான் எங்களையெல்லாம் பார்க்கனும்னு உனக்குத் தோனிச்சா...??.."
"நானும் இங்கதான்மா இருக்கேன்...என்னையும் இரண்டு பேரும் கவனிச்சீங்கன்னா ரொம்ப நல்லாயிருக்கும்..."
நல்லவேளை அவன் இடையில் குறுக்கிட்டான்...இல்லையென்றால் அவனது அம்மாவின் கேள்விக்கு என்ன பதிலைத்தான் சொல்லியிருக்க முடியும்...?
"உன்னைத்தானே 29 வருசமா கவனிச்சிட்டு இருக்கேன்....இதுக்குமேலயும் உன்னை என்னால கவனிக்க முடியாது பா..."
"கவனிக்கலைன்னா போங்க...அதான் என்னைக் கவனிச்சுக்க இரண்டு பேர் இருக்காங்களே..."
"போடா படவா..."
"எங்கம்மா ஆருக்குட்டி...??..சாப்பிட்டாளா...?.."
"உன்னோட கதைச்சதும்தான் சாப்பிட்டாள்...இப்போத்தான் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தூங்கினாள்..."
"அதானே...இல்லைன்னா இந்நேரத்திற்கு என் செல்லம் என்கிட்ட ஓடி வந்திருப்பாளே...??.."
"ஆமா நீங்க என்ன மித்ராவை வாசலோடையே அனுப்புற பிளானா...??.."
"ஹைய்யோ...உள்ள வா மா...உன்னைப் பார்த்த சந்தோசத்தில அதை மறந்தே போயிட்டேன் பாரு..."
"நீங்க அவளை பார்த்த சந்தோசத்தில என்னையே மறந்து போயிட்டீங்க...."
இவ்வளவு நேரமாக அவன் முகத்திலிருந்த இறுக்கம் இப்போது காணாமல் போயிருந்தது...நான்கு வருடங்களின் முன் அவனை எப்படிப் பார்த்தேனோ...அதே குறும்பும் புன்னகையும் இப்போதுதான் அவனிடத்தில் மீண்டும் வந்திருந்தது...
அவன் சொன்னது உண்மைதான்...அவனது சந்தோசம் மொத்தமும் இங்குதான் கொட்டிக் கிடக்கிறது...அதை நினைக்கும் போது மனதிற்கு ஒரு பக்கம் கவலையாகவும் மறுபக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது...
"இப்படி உட்காரும்மா...நான் போய் உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வாறேன்..."
"ஹைய்யோ அதெல்லாம் ஒன்னும் வேணாம் மா..."
"அவ அப்படித்தான் மா....நீங்க ஏதாவது ரெடி பண்ணுங்க...நான் என்னோட பொண்டாட்டியை அவளுக்கு அறிமுகப்படுத்திட்டு வாறேன்..."
"சரிப்பா...நீ போய் பார்த்திட்டு வாம்மா...."என்றவாறே அவர் சமையலறை நோக்கிச் செல்லவும்,
"மேலே ரூம்லதான் அவ இருப்பா...வா..."
அவன் முன்னே படிகளில் ஏற திக் திக் என்று துடிக்கத் தொடங்கிய மனதோடு நானும் அவனைப் பின்தொடர்ந்தேன்...
அறையின் கதவைத் திறந்து கொண்டே அவன்,
"ஹாய் பொண்டாட்டி...இன்னைக்கு உன்னைப் பார்க்க யாரு வந்திருக்கிறான்னு பாரு..."என்றவாறே உள் நுழைந்தான்...
என் கால்கள் அறையின் வாசலிலேயே ஒன்றோடு ஒன்று பின்னிக் கொண்டன...அதற்கு மேலும் என் கால்கள் நகருவேனா என்று அடம்பிடிக்க நான் அதிலேயே நின்று கொண்டேன்...
தொடரும்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
