காதல் மாயவளே

மானுட விதிகளில்
மாயங்கள் செய்தவளே..
மயங்கி நிற்கிறேன்

மதிமுழுதாய் தரையிரங்கி உன்
மேனி அடைந்துவிட்டது

மன்மத காவியம் நான் பாட
மல்லிகை மேனி கிடைத்துவிட்டது

மகரந்தத் துகளில் ஒட்டிக்கொண்டேன்
மந்திரபோர்வைக்குள் கட்டிக்கொண்டேன்

நரம்பிடைவீணை இசை மீட்டிடலாகாதோ
அடிநெஞ்சில் மனம் துள்ளி கொய்திடலாகதோ

தினம் உந்தன் பார்வை மேலேபட்டால் - சுக
திரவியம் போலொரு வாசம் வீசும்

வருடிச்செல்லும் பூங்காற்றும்
வாசலிலேயே நின்று கண் தட்டும்

கருங்கல்லின் காக்காய்ப் பொட்டாய்
கண்விழியோரம் மினுமினுப்பாய்

கட்டிக்கரும்பின் கடைசி சொட்டாய்
நுனிநாக்கில் நின்று இதழ்சுவைப்பாய்

வெண்தாமரை உன்மேல்
இவ்வெய்யோன் ஒளி வீசவேண்டும்

விரல்பிடித்து நடக்கும் நம் நாட்கள்
இனி மெல்ல நீளவேண்டும்

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (8-Dec-17, 7:12 pm)
பார்வை : 442

மேலே