சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா..!
===============================================
அய்யா! அவனங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்தால்..
……………அன்றாடம் அலைந்து ஓய்ந்தவனெனவும் தெரியும்.!
அய்யே!இனியிந்த நாய்ப்பிழைப்பு வேண்டாமென..
……………அருவருக்குமவன் மனநிலையையும் அறிய முடியும்!
ஒய்யாரமாய் ஓய்வெடுக்க ஒடிந்துவிழுந்த கிளையின்..
……………ஓரத்திலமர்ந்து நீநினைவது என்னவென்பதும் புரியும்!
வெய்யிலுக்கு மரநிழல்தரும் சுகம்போல இப்போது..
……………வீணாகப்போகும் நேரத்தில் வாட்ஸ்அப் இதம்தரும்!
படித்துப் பட்டம் பெற்றவர்கள் வேலைதேடியிங்கே..
……………பல்லாயிரம் பேர்வருவார் மொத்தமாக ஓரிடத்துக்கு!
அடிக்கொரு அலுவலகம் இருந்தாலுமதன் கதவுகள்..
……………அனைத்திலும் வேலை காலியில்லை எனுமறிவிப்பு.!
கடிமணமாகாத காளையரென்றால் குடியிருக்க வீடு..
……………கிடைக்காது இக்கொடுமை போதாதெனில் அங்கே!
முடியைப் பிய்த்துக்கொண்டு முழுநேரமும் வேலை..
……………முடிந்தபின்னும் வீடுதிரும்ப முடியா நிலையிதுவே!
சொந்த ஊரிலிருந்த சுகமெல்லாமிங்கே இல்லை..
……………சந்துபொந்துக்குப் பஞ்சமில்லை சத்துண வில்லை!
பந்தங்கள் இருந்தும் பெயருக்குத்தான் சொந்தம்..
……………பணக்காரத் தனத்தினால் உறவுக்குக் வந்ததுகேடு!
மந்திரசக்தியால் மாம்பழம் பறிப்பது போலத்தான்..
……………எந்திரசக்தி கொண்டுதான் எதுவுமிங்கே இயங்குது!
சிந்திக்கக் கூடயிங்கே சிறிதளவேனும் நேரமில்லை..
……………பந்தியிலுட்கார்ந்து சாப்பிட பக்கத்தில் நிற்கவேணும்!
உழைக்கும் விவசாயி குடும்பத்தில் பிறந்தவனவன்..
……………ஊர்விட்டு ஊர்வந்தான் பிழைப்புதேடி ஒருவனாக.!
உழவுக்குடி உயரவே உயர்படிப்பு படித்தானவன்..
……………உயரும் நாகரீகத்தில் நரகமேமேலென நினைத்தான்!
அழகுதிமிர்க் காளைபோல கட்டுடல் மேனிகொண்ட..
……………அவன்மனது…உழவுத் தொழில்மீதே நிழலாடுகிறது.!
உழலுமவன் மனதுக்கு ஆறுதலுமிங்கில்லை மீண்டும்..
……………இழந்ததைப்பெற கிராமத்துக்கே போக விழைகிறான்!
========================================================
வல்லமை கொடுத்த படத்திற்கு எழுதிய கவிதை...