மரணம் பற்றிய தேடல்
![](https://eluthu.com/images/loading.gif)
பிறந்தவர் எல்லாம்
இறப்பவர் ஒருநாள்
இயற்கையின் நியதி
மறுப்பவர் எவருண்டோ ?
இன்பமமும் துன்பமும்
இடையில் சந்திக்கும்
நிகழ்வுகள் என்பதும்
நிதர்சனம் வாழ்வினில் !
விரக்தியும் கவலையும்
தேங்கினால் நெஞ்சில்
வருத்தம் வழிவதை
தடுக்கவும் முடியுமோ ?
வாடுதல் துவங்கி
தேடுதல் தொடங்கும்
மனிதனின் மனதும்
மரணத்தை எண்ணியே !
வாழ்ந்து முடித்தவனும்
வாழ்வை வெறுத்தவனும்
வாயிலைப் பார்த்தே
வரவேற்க காத்திருப்பான் ...
வருகின்ற மரணமும்
வருத்திட வைக்காது
வன்முறை இல்லாது
அமைதியாய் நிகழுமென !
உள்ளமது அல்லாடும்
குழப்பத்தில் தவித்திடும்
உறங்காத விழிகளும்
உலர்ந்திடும் நிலையாகும்...
நிரந்தரமாய் உறங்கிட
நிம்மதியாய் மரணிக்க
நேரமதுவும் விரைந்திட
விட்டத்தை நோக்கிடும் !
நிலையானது அல்லவே
மகிழ்ச்சியும் மனிதனுக்கு
இன்னல்கள் குறுக்கிடும்
உள்ளவரை மண்ணில்தான் ..
தேடுவதால் கிடைக்காது
நிச்சயித்த மரணமும்
வந்திடும் எப்பொழுதும்
உறுதிதான் எவருக்கும் !
பழனி குமார்