விரிந்து கிடக்கிறது வானம்

விரிந்து கிடக்கிறது வானம்

இயற்கையை வணங்குதல்
என்பது
இயல்பான
வழிபாடு.

வணங்குதல் என்பது
பணிதல்
என்பது மட்டுமல்ல.
சரணடைதலோடும்
முடிவதல்ல.
இசைதல்.
ஈதலுடன்
இசைபட வாழ்தல்
என்பதே
அது.

தன்னை முழுமையாக
வெளிப்படுத்திக்
கொள்கிறது
ஒளிவுமறைவின்றி
இயற்கை.

எந்த
கைகளாலும்
எளிதாக
மறைத்துவிட இயலாது
கதிரவனின்
கதிர்கைகள்
உட்பட.
நிழலாலும்
நிறைத்துவிட முடியாது.
அதுதான்
இயற்கையின்
பேராற்றல்.

வெளிப்படை
என்பதும்
வெளிப்படுத்துவதும்
இயற்கையின்
பாடங்கள்.
மனிதர்களின்
ஆளுமையை
வளர்க்கும்
பாடங்கள்.

'மனிதர்களே
வெளிப்படுத்துங்கள்!
கிளைகள்
விரித்து
மலர்பரப்பி
மணம்வீசி
எண்ணங்களை'
என்கிறது
இயற்கை.

வெளிப்படுத்திக்
கொள்ளும்
தருணம்தோறும்
வணங்கப்படுவீர்கள்.

எண்ணங்களின்
ஈதலுக்குப் பின்
மனம்
மிதமாகிறது.
மிதமான
மனங்களையே
கரங்கள்
தொழும்.

வாழ்வில்
வேறென்ன வேண்டும்
தோழமைகளே?

மனிதர்கள்
மனச்சிறை
களிலிருந்து
விடுபட்டு
மனச்சிறகுகளுடன்
பறந்திடவே
வானம் விரிந்து
கிடக்கிறது.

-சாமி எழிலன்

05 03 2018

எழுதியவர் : சாமி எழிலன் (5-Mar-18, 8:02 am)
சேர்த்தது : Saami Ezhilan
பார்வை : 111

மேலே