வெறுமை

அடைமழை காலத்து
அட்டைப்பூச்சியாய்
சட்டென வந்து சமயங்களில்
ஒட்டிக்கொள்கிறது
ஒரு வெறுமை.

காரணம் கண்டுதெளியும்முன்
கற்பாறையாய்
கனத்துவிடுகிறது மனது!

வழமை மாறாத
வறட்டு வாழக்கையோ
அல்லது
வருங்காலம் பற்றிய
வலுவிழந்த நம்பிக்கைகளோ

ஏதோவொரு காரணி
எடுத்து வந்து
சேர்த்துவிடுகிறது
இந்த வெறுமையை!

எதனுடனும் ஒப்பிட்டுவிட
முடிவதில்லை எளிதில்
இந்த வெறுமையை!

சிதிலமடைந்த சிலந்தி வலையை
சில நொடிகள்
உற்று நோக்கும்போதும்
புத்தகங்களால் நிரம்பியிருந்தும்
புரட்ட ஆளில்லாத
நூலகத்தைக் கடக்கும்போதும்
இவ்வெறுமையின் சாயலை
வேறு நிறத்தில்
உணர முடிகிறது!

புறந்தள்ளிக் கடந்து செல்வதும்
மறந்துவிட்டு மற்ற பணி செய்வதும்
கடினமான ஒன்றாகவே
அமைந்துவிடுகிறது
அடுத்த சில நிமிடங்களுக்கு!

ஒரு குழந்தையின்
குறும்புச் சிரிப்போ
அல்லது
குளிர்கால முகிற்கூட்டமோ
என சிலிர்ப்பிற்குரிய
ஏதோவொன்று
மீட்டெடுத்துவிடத்தான் செய்கின்றன
வெறுமையின் பிடியிலிருந்து
வெகு நேர்த்தியாய் நமை!

ஆனாலும் ஒரு
குறுகிய இடைவெளியே
போதுமானதாக இருக்கிறது
அடுத்ததொரு வெறுமையை
அவசரமாக நம் மனம்
உடுத்திக்கொள்ள!

மெல்லியதொரு வலியை
மென்று விழுங்கிவிட்டே
மேற்சொன்ன வெறுமையை
மெதுவாகக் கடக்க முடிகிறது!

உள்ளத்தின் சிறு
உறுத்தலுக்கு நடுவே
உணரத்தகுந்ததொரு உண்மை
யாதெனில்....

வசித்தேயாகவேண்டிய வாழ்க்கையின் கட்டாயத்தால்
இரசித்தேயாகவேண்டிய ஓன்றாகிப்போகிறது
வேறு வழியின்றி
இவ்வெறுமையும் அது சார்ந்த
வெற்றிடமும்!

- நிலவை.பார்த்திபன்

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (16-Mar-18, 3:35 pm)
Tanglish : verumai
பார்வை : 372

மேலே