அவள் ஒரு புரியாத புதிர்

யாரோ எழுதிய
ஒருவரிக் கவிதை !
'காதல் ஒரு தேன் கூடு ' !

ஆம் ! அடுத்த வரி
எழுத ஏனோ
மறந்துவிட்டார் !

காதல் என்பது
தேன் கூடு !
அதை தீண்டினால்
காயங்கள் இலவசம்
கண்கூடு !

காதல் தேன் !
காதலி கொட்டும் ஈ !

நித்தம் அவள்
நினைவுகளுடன் போராடி
அவள் விழிகளிடம்
தோற்றுப் போகிறேன் !

ஒருபோதும்
அவள் என் வினாக்களுக்கு
விடையாய் இருந்ததில்லை !

நான் 'காதல்
தேடலின் தொடக்கம் '
என்பேன் ; அவள்
'என் தேவையின்
தேடல்' என்பாள் !

என் இரவுகளை மொத்தமாய்
இரவல் கொடுத்துவிட்டேன் !

என் விழிகள்
தூக்கத்திற்கு
நிரந்தர விடை கொடுத்து
வெகு நாட்களாயிற்று !

இன்னும் ஏனோ
அவளுக்கு இரக்கமில்லை !

சரணடைந்த பின்னும்
சாட்டை சுழற்றுகிறாள் !

தோல்வியை ஒப்புக்கொண்ட
பின்னும் நினைவுகளால்
நித்திரை சிதைக்கிறாள் !

உண்மைக்காதல்
வென்றதாக ஒரு
காவியமும் சொல்லவில்லை !

சரித்திரமும்
சான்றளிக்கவில்லை !

நானும் அவ்வழியே
காதலோடு அவள்
அடி தொடர்கிறேன் !

அவளோ கானலாய்
கண்ணாமூச்சி ஆடுகிறாள் !

காதல் இசையில்
ஒளிந்திருக்கும் சுகம்
சிலருக்கு !

பஞ்சில் ஊறிய
நீர் போல நெஞ்சில்
நிறை(லை)த்துவிட்ட
கனம் பலருக்கு !

காதல் இன்பம்
சுரக்கும் சுனை சிலருக்கு !

தொண்டயில் சிக்கிய முள்
பலருக்கு ! விழுங்கவும்
முடிவதில்லை !
துப்பவும் துணிச்சலில்லை !

காதல் வெல்லுமா ?
காலம் பதில்
சொல்லட்டும்
காத்திருக்கிறேன் .....!

எழுதியவர் : நெட்டூர் மு.காளிமுத்து (26-Mar-18, 12:23 am)
பார்வை : 159

மேலே