ஒரு தாசியின் நியாய கண்ணாடி
தாசி
கல்யாண சந்தையில் விலைபோகா மகள்
கட்டில் சந்தையில் விலைமகள்..
தாசி
தேவனும் வேஷமிட்டு
உன்னிடம் வந்ததாலோ
"தேவதாசி " யானாயோ?..
தாசி
வயிற்றுப் பசி யார
உடல் பசி யாற்றுபவளோ?
பள்ளி செல்ல வழியின்றி
வழி தவறி பல்லி சென்றவளோ..?
குடிசையின் கெளரவம் காக்க
பல குடிசைக்குள் போனவளோ ?
குடும்ப விளக்கு சுடர் விட
பல அறை விளக்கை அணைத்தவளோ?
புருவ மையிட்டு
துருவம் தொலைத்தவளோ ?
உடற்சூடு தணியாமல்
மனச்சூடு கொண்ட
பல குடும்ப தலைவனின்
குலம் காத்த குலதெய்வமோ ?
எவ் வனுபவ மேனிக்கும்
நீ புதியவளே..!
எப் புதிய மேனிக்கும்
உன்னால் அனுபவமே..!
நீ தாளிட்டு கொண்டது
தங்கைக்கு தாலிக்கயிறு ஆனதோ ?
பிணி என்றாலும் துணிந்தாய்..
அரை மனதாய் அம்மணமானாய்..
நட்பு காதல் உனக்கும் உண்டோ ?
அவர்களும் உன்னை தாசியாய் பார்ப்பதுண்டோ ??
உன் முகவரி தேடி
பலர் முகவரி தொலைந்தது..
உன் முகவரியால்
பலர் முகமூடியும் கிழிந்தது!
உன்னை நாடும் ஆண்
ராமனென்றால்
நீயும் கண்ணகியே !!