கிராமத்து நற்சுவைகள்
கிராமத்து நற்சுவைகள்
***********************************************
வைகறையில் துயிலெழுந்து வாசலில் கோலமிட்டு
வைகையின் மீனாளை மனமிருத்தி விளக்கேற்றி
கா கரையும் முன்வேளை காததூரம் வழிநடந்து
ஏரிக்கரை ஓரத்து நிலத்தில் பயிர்பார்த்து
பார்தபயிர் நொந்திருக்க அதுபிழைக்கும் வழியாக்க
ஆர்த்தெழும் களைதன்னை வேரறுத்து நீக்கிவைத்து
அர்த்தமுள்ள அறிவுரைகள் பணியாட்கு எடுத்துரைத்து
ஊர்ந்திடும் ஆதவனும் நன்குஎழ இல்லடைந்து
சட்டியில் இட்டுவைத்த புழுங்கரிசிப் பழஞ்சோற்றில்
கட்டித்தயிர் தனைசேர்த்து கட்டியாய் அதைப்பிசைந்து
வட்டில் இட உதவிக்கு வெங்காயம் மிளகாயும்
மட்டற்ற மகிழ்ச்சியில் நிறைவயிறு பாராட்ட
தரிசுநிலப் புல்வெளியில் ஆடுமாடு மேயவிட்டு
இருசனாம் பணியாளை உதவிக்கு கூப்பிட்டு
பரிசாம் பயிர்தனக்கு வரப்புயர நீர்பாய்ச்சி
அரசாம் மரநிழலில் ஊர்க்கதை பலபேசி
ஆதவனோ உச்சியேற ஆகுநேரம் நிழல்கணிக்க
காதவழி கால்நடந்து பகல்வேளைச் சோற்றுக்காய்
சாதமிடும் நோக்கத்தில் புகலிடமாம் இல்புகுந்து
தீதில்லாச் சுள்ளியிட்டு மண்ணடுப்பு பற்றவைத்து
பானையில் சோறாக்கி குளத்துமீனைக் குழம்பாக்கி
இணையாக கறிவடகம் நேர்த்தியாய் வருத்தெடுத்து
அணைகட்டிய சோற்றினை சுவைத்திடும் தருணத்தில்
ஏனைய குடும்பத்தார் கூட்டாக தரையமர்ந்து
கூடியுண்ட களிப்பினில் சேடிதனைப் பாராட்டி
செடிகண்ட வெற்றிலையை பாக்கோடு மென்றுமிழ்ந்து
ஆடும் இலை வேம்புமர நிழலிடை கட்டிலிட்டு
நாடிவந்த உறக்கத்து சிறுநேரம் கிடந்தெழுந்து
ஓயாது வறுத்தெடுத்த பகலவனோ கீழிறங்க
மேயவிட்ட ஆடுமாடு அவைதன்னை ஒருங்கிணைத்து
ஆயத்தில் அடைத்துக்கட்டி அதற்கும் உணவிட்டு
சாயங்காலம் அதுநேர சிறுபொழுது காத்திருந்து
பக்கத்து டூரிங்கில் எம் ஜி ஆர் படம்ஓட
ஊக்கமாய் நடைபோட்டு சுவரில்லாத் திரையரங்கில்
ஏக்கமாய் அமர்ந்திருக்கும் மறுமனைப் பெண்ணுடன்
தாக்கங்கள் பலகொண்ட பேச்சுடன் மகிழ்ந்திருந்து
வணக்கம் போட்டவுடன் வெளிச்சம் அதுபரவ
சுணக்கமிலாத் தாக்கங்கள் மனமின்றி வெளியேற
கனக்கும் இதயத்தொடு பிணக்கமது கலைந்துவிட
இணக்கமாய் வரவேற்கும் வாய்த்திட்ட இல்அடைய
ஆட்டுக்கறி பிரியாணி பாந்தமாய் ஆகியிருக்க
நாட்டுச் சரக்குதனை நயமாய் ஊற்றிவைத்து
இட்டமாய் இல்லாளும் பாசத்தோடு பரிமாற
ஏடுஅடங்கா இன்பத்தில் ஓட்டமிடும் சாமங்கள்
இவையாவும் யாம்காணும் கிராமத்து நற்சுவைகள்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
