தமிழினம் விழித்தல் என்றோ
வேங்கையாய்த் தமிழன் பாரில்
விழிதனில் வீரம் காட்டி
ஓங்கிய புகழும் நீங்க
ஒடுங்கியே நரியாய் மாற
ஏங்கிய விழிகள் மின்ன
இழிநிலை அகழி தாண்டி
தாங்கிய பெருமை மீள
தமிழினம் விழித்தல் என்றோ!
செந்தமிழ்க் கவிதை பேசிச்
செழித்தநல் சோலை தன்னில்
பைந்தமிழ்ப் பாடி நின்ற
பாவலன் மாண்டே போனான்!
அந்தமிழ் மறந்தே இன்று
அயல்மொழி புகழ்ந்து பேசும்
சந்ததி உண்மை கண்டு
தமிழினம் விழித்தல் என்றோ!
கன்னிதன் கண்கள் சேர்ந்து
காதலால் ஒருங்(கு)இ ணைந்து
மன்னவன் மரபு மாறா
மாண்புடன் வாழ்ந்த அந்தச்
சின்னமாய் ஊரார் சொன்ன
சிறப்புகள் போன தெங்கே!
தன்னிலை மாற்றி நெஞ்சம்
தமிழினம் விழித்தல் என்றோ!
எந்தையும் தாயும் வாழ்வை
இயக்கிடும்; தெய்வம் என்றே
சிந்தையும் களித்து நாளும்
சிரித்தவர் எங்கள் முன்னோர்!
நொந்(து)அவர் சுற்றம் இன்றி
நோயிலே வாடி நின்று
சந்ததம் மாய்ந்து வீழும்
தமிழினம் விழித்தல் என்றோ!
தத்துவம் தன்னைச் சொன்ன
தனயனாம் அருமை மைந்தன்
வித்தகன் தமிழன் தானே!
விதிவழி மாறி நின்று
சத்தியம் சாய்த்து இங்கு
சித்தமும் குலையா வண்ணம்
தத்தியம் காக்க வென்றே
தமிழினம் விழித்தல் என்றோ!
-------------------
கவிதைத் துளிகள்
கவிஞர் சிமோன் இராசேசுவரி- கம்பன் ...