காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றி, கச்சியப்பரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விநாயகர் காரிய சித்தி மாலை,

எண்ணியதையெல்லாம் ஈடேற்றும் விநாயகர் காரிய சித்தி மாலை காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றி, கச்சியப்பரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட விநாயகர் காரிய சித்தி மாலை, ஓர் ஒப்பற்ற மந்திரம்.
எந்தப் பணியை ஆரம்பித்தாலும் விநாயகரைத் தொழுதுவிட்டே ஆரம்பிப்பது ஆன்மிகர்களின் வழக்கம். எந்த விஷயத்தையும் எழுதுமுன் குட்டியாக ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதத் தொடங்குவதும் பலருக்கு வழக்கம்.
விக்னமில்லாமல் முடிய வேண்டிய எந்த வேலைக்கும் விக்னேஸ்வரரின் அருள் கட்டாயம் வேண்டும். அன்றன்றைய கடமைகள் என்றில்லாமல், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி பொங்கவும் எதிர்ப்படும் பிரச்னைகளை எளிதாகக் கையாளவும் முறையாகத் திட்டமிடவும் அனைவரிடமும் அன்பு செலுத்தவும் அனைவரது அன்பும் நம் மீது பரவவும் சுமுகமான வாழ்வை சந்தோஷமாக மேற்கொள்ளவும் இந்த விநாயகர் காரிய சித்தி மாலையை தினமும் ஜபிப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறார் காஷ்யப முனிவர். இந்த வழிபாடு முற்றிலும் தமிழிலேயே அமைந்தது. எளிமையானது. நேரடியானது. நாமே பொருள் புரிந்து கொள்ளக்கூடியது. ஆகவே இப்பாடல்களுக்குத் தனியே விளக்கவுரை தேவைப்படாது.
விநாயகரின் தத்துவம் விநாயகர் அட்டகத்தின்மூலம் இங்கு விளக்கப்படுகிறது. "காரியசித்தி மாலை" என்றும் இது அழைக்கப்படுகிறது.
காரியசித்தி மாலை
1. பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்த மறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன் பால் தக வருமோ
அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றாம்.
2. உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருள் எவன் அவ்
உலகிற் பிறங்கும் விவகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டுங் களை கண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றாம்.
3. இடர்கள் முழுதும் எவன் அருளால் எரி வீழும் பஞ்சு என மாயும்
தொடரும் உயிர்கள் எவன் அருளால் சுரர் வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறு இன்றிக் கருமம் எவனால் முடிவு உறும் அத்
தடவு மருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றாம்.
4. மூர்த்தி ஆகித் தலம் ஆகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தம் ஆகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
5. செய்யும் வினையின் முதல் யாவன் செய்யப்படும் அப் பொருள் யாவன்
ஐயம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய் இல் இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.
6. வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்கு பர
நாத முடிவில் வீற்று இருக்கும் நாதன் எவன் எண் குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
7. மண்ணின் ஓர் ஐங் குணம் ஆகி வதிவான் எவன் நீர் இடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வான் இடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக் கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்.
8. பாச அறிவில் பசு அறிவில் பற்றற்கு அரிய பரன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும் அவன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக் கணபதியத் திகழச் சரணம் அடைகின்றோம்.
நூற்பயன்
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினம் மும்மைச்
சந்திகளில் தோத்திரம் செயினும் சகல கரும சித்தி பெறும்
சிந்தை மகிழச் சுபம் பெறும் எண் தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர் எண்கால் படிக்கில் அட்ட சித்தி உறும்.
திங்கள் இரண்டு தினந்தோறும் திகழ ஒருபான் முறை ஓதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத்தொரு முறைமை
பொங்கும் உழுவலால் கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக் கல்வி
துங்க வெறுக்கை முதற் பலவும் தோன்றும் எனச் செப்பினர் மறைந்தார்.

எழுதியவர் : (31-Jan-19, 2:55 pm)
பார்வை : 191

மேலே