மரணம் வரை மறவேன்

மரணம் வரை மறவேன்
எதற்கும் கலங்காத நீ
என் பிரிவை எண்ணி
கல்லுக்குள் ஈரமாய்
கலங்கி போன உன் குரலை கேட்ட
கடைசி அலைபேசி பேச்சு

மரணம் வரை மறவேன்
நம் இணைவு முதல் பிரிவு வரை
என்னை நீ திட்டாததும்
உன்னை நான் திட்ட மறக்காததும்

மரணம் வரை மறவேன்
என் நலனை கருத்தில் கொண்டு
உன் வலிகளை நெஞ்சில் சுமந்து
நாள்தோறும் ரணம் ரணமாய்
நீ கழித்த ஒவ்வொருநாளும்

விலகி செல்ல முடியாமல்
இணைந்து வாழ முடியாமல்
திக்கி தவித்து
மற்றவருக்காகவும் உற்றவருக்காகவும்
கருவிலே காதலை
கொடி அறுத்து
துடிதுடிக்க வைத்த நாம்

விதியின் சதியென கூறி
விலகி சென்று
வேடிக்கை பார்க்கும்
நூறில் ஒருவர் தான்

-ஷாகிரா பானு💝

எழுதியவர் : ஷாகிரா பானு (1-Feb-19, 1:02 am)
பார்வை : 1059

மேலே