ஏனடா உனக்கு இத்தனை வெறி

ஏனடா உனக்கு இத்தனை வெறி...?

அதோ! எங்கோ பச்சிளங் குருத்தின் ஓலக்குரல்...
மாமா.....மாமா ..., என்னை விடுங்க
அங்கெல்லாம் எதற்கு என்னை தொடுகிறீர்கள்..,?
எனக்கு மிகவும் வலிக்கிறது....
குரல்கேட்ட திசைநோக்கி
தலைதெறிக்க ஓடினேன்...
இதழ் உதிர்ந்த மொட்டு அங்கே பிணமாகக் கிடந்தது.....

அதோ! எங்கோ ஒரு ஆன்மாவின் கேவல்....
நம்பி வந்த என்னை
நாற்புறமும் குதறிட ஏவுகிறாயே
கதறிக் கதறி கம்மியப் பெண் குரல்
பதறியடித்து ஓடினேன் அங்கே
சிதறிக் கிடந்தது அழகிய பூங்கொத்து

அதற்குள் வேறொரு அபயக்குரல் ...
ஐயோ...ஐயோ... என்னை அடிக்காதீர்கள்
ஆடைகளை நானே களைந்துவிடுகிறேன்....
அச்சத்தின் உச்சத்தில் அம்மணமாய் கிடக்க
பேடிகள் கூடி கூட்டாய் புணர்ந்து
கொடூரமாய் கொக்கரித்த ஆணவக்குரல்
தேடி ஓடினேன் அபலையை மீட்க
வாடி வதங்கி நொடிந்துக் கிடந்தது புதுமலர்

பிரசவ அறையில் வன்கொடுமை
பிண அறையில் வன்புணர்வு
கழிவறையில் வன்கொடுமை
கல்லறையில் வன்புணர்வு.....
பெண்மையின் கூக்குரலும் அலறலும்...
விம்மலும் கேவலும்...
எண்திசையும் எதிரொலிக்க...
பதைபதைத்துப் பதறி வெடிக்கிறது இதயம்
உணர்வுகள் சிதறி துடிக்கின்றது உள்ளம்

மார்பகத்தில் சற்று ஏழும்பிய சதை
இடுப்பிற்குக் கீழே ஒருசிறு துளை
இவ்வளவு தானடா
உனக்கும் எனக்கும் வேற்றுக்குறி
இதை சுவைப்பதில் உனக்கேன் இத்தனை வெறி.....?

ஆடை விலகினால் காமம் துளிர்க்குமா...?
ஆறுவயது குழந்தையை பார்த்து
ஆணுறுப்பு எழுந்திடுமா...?
ஐயகோ..! தாயே அகிலாண்டேஸ்வரி ....
ஆடவர்முன் ஆடைவிலகாது காட்சிக்கொடு...
கருவறையை உள்ளேயும் தாழிட்டு வை!
அரவமற்ற நேரத்தில் அங்கும் நுழைந்து
வன்புணரத் துடித்திடும் வக்கிர ஆணினம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (29-Mar-19, 9:22 pm)
பார்வை : 187

மேலே