கடும்பகல் ஏதிலான் பாற்கண்ட இல்லினும் பொல்லாதே - நீதிநெறி விளக்கம் 8

நேரிசை வெண்பா

நெடும்பகற் கற்ற அவையத்(து) உதவா(து)
உடைந்துளா ருட்குவருங் கல்வி - கடும்பகல்
ஏதிலான் பாற்கண்ட இல்லினும் பொல்லாதே
தீதென்று நீப்பரி தால் 8

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

பல நாட்களாக தம்மாற் படிக்கப்பட்ட நூல்கள் அவையிலே எடுத்துரைப்பதற்குக் கூடாமல் தோல்வியுற்றிருப்பவருடைய நாணமும், அச்சமும் தரும் படிப்பானது நண்பகலில் அயலவனிடம் வயப்பட்டிருக்கப் பார்த்த மனையாளை விடத் தீயதாகும்; ஏனெனில், அவளைத் தீயவளென்று நீக்குமாறு போலத் தன் கல்வியைத் தீயதென்று நீத்தற்கு அரிதாகும்.

விளக்கம்: பகல் - நாள், நெடுமை - நீட்சி, கற்ற கல்வி, உட்கு வரும் கல்வி என்றும் சொல்லலாம். கடும்பகல் – பெரிதும் கடுமையான உச்சிக்காலம்.

இல்லாள் தற்கொண்டாற் பேணி அறுசுவை உண்டி அமர்ந்து ஊட்ட வேண்டியவளாதலின், அதனைச் செய்யாது, கொண்ட கணவன் காலையில் தொழிலின் பொருட்டு வெளியே வயல் முதலிய இடங்கட்குச் சென்று வியர்த்திளைத்துத் திரும்பியவன் மேலுந் துயருறும்படி அயலவன் அகம் அடைந்திருப்பதுணரின் அத்தகைய மனைமாட்சியற்றாள் தனக்கு நலம் பயவாதவள் என்று விலக்கப்படுதலும் கூடும்;

ஆனால் கற்ற கல்வி அங்ஙனம் நீக்கப்படுதலும் இயலாதென்பார், `இல்லினும் பொல்லாதே' என்றார்.
இல் - உடைதல் - பின் வாங்கல், கெடுதல், நீப்பு: நீ + உட்கு = நாணமுமாம்.

கருத்து: அவைக்கு அஞ்சுங் கல்வி தீதுடையது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Nov-19, 4:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 73

சிறந்த கட்டுரைகள்

மேலே