உதிரப் பொங்கல்
அரவணைக்கும் தாயாகிய
நிலத்திற்கு நன்றியுரைக்க
வெற்று வயிறை பானையாக்கி
உடலுடன் ஒட்டிய தோலை தோரணமாக்கி
விழுகின்ற வியர்வைகளை
நெல்மணியாய்ச் சேகரித்து
தமிழ்ப் பாரம்பரியம் போற்றி
அழகுற அலங்கரித்து
கதிரவனை துயிலெழுப்பி
மங்களம் பொங்கட்டும்
மனக்கவலை தீரட்டும் - என
இல்லாத நம்பிக்கையுடன்
பொங்கலோ பொங்கல் – என
பரவசம் பொங்க
நான் கத்திய போது
பொங்கியது பாலல்ல
உழைத்துக் களைத்த எம்
உழவனின் உதிரம்.