64 கீழோர்க்குப் போதிக்கினும் மெய்யுணர்ந்தார் கேடுறார் - ஞானாசிரியன் பெருமை 11

கலி விருத்தம்
(விளம் 4)

பரிதியின் கிரணமங் கணமதிற் படியினும்
அரிதின்மா சணுகுறா தகலல்போ லினியநற்
சரிதமில் லவர்குழாஞ் சார்ந்துபோ திக்கினுந்
துரிதவெம் பவமுறார் தொன்மறைக் கிழவரே. 11

- ஞானாசிரியன் பெருமை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”ஞாயிற்றின் கதிர்கள் அழுக்கு நீர் செல்லும் அங்கணத்துள் படிந்தாலும் அக்கதிர்களின் தூய்மை கெடாமல் அழுக்கு நீங்கி விடும். அது போல, தொன்மையான மெய்யுணர்ந்தவர் நல்லொழுக்கமில்லாதவர் கூட்டத்தில் சார்ந்து போதித்தாலும் தாம் விரைவில் கொடிய தீங்கெய்த மாட்டார்” என்று கூறுகிறார் இப்பாடலாசிரியர்.

அங்கணம் - கலங்கழுவுமிடம். மாசு - அழுக்கு. சரிதம் - ஒழுக்கம். துரிதம் - கேடு.

மறைக்கிழவர் - மெய்யுணர்ந்தார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-May-20, 3:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

சிறந்த கட்டுரைகள்

மேலே