காலமெனும் காலன்

காலமே, நீ ஒரு
கொடூர காலனே

உன் போக்கில்தான்
பிறக்கிறாள் அந்த
அழகு குழந்தை ....
உருண்டை மதிமுகம்
அடர்ந்த சுருள் முடி
மலர்ந்த தாமரைக்
கண்களுடன் .......
குவிந்த செவ்வாயுடன் ......

நீ முன்னே போகின்றாய்
காலமே...............
அந்த குழந்தையின் பயணம்
இப்போது உன் போக்கில் !

அவள் இப்போது வளர்ந்துவிட்டாள்.....
அந்த மதனனே மயங்கும்
அழகு தேவதையாய்
பார்ப்போரெல்லாம் மயங்கும்
பேரழகியாய்.....
இதைக் கண்டா உன் கண்களுக்கு
பொறுக்கவில்லையோ ...
உன் காலச்சக்கரத்தில் அவளை
நீ இழுத்துக்கொண்டு போக
அவள் தளர்ந்துபோகிறாள்
அவள் இளமையும் மெல்ல மெல்ல குன்ற
அவள் மதிமுகம் வாட
சுருங்க தொடங்க .....அவள்
கார்முகில் கூந்தல்
வெண்முகிலானதே காலமே
உன் காலப்போக்கில்
உடல் தளர்ந்து நடையும் தளர
அங்கங்கள் எல்லாம் தளர
காலமே உன்போக்கில்
அவளை நிலைகுலைய செய்கின்றாய்

நீயே உரு தந்து அழகியாக்கி
நீயே அவள் அழகைக் குலைப்பதேனோ
அழகிய சிற்பம் செதுக்கி அதை
அதே உளிகொண்டு சிதைப்பதுபோல்

காலமே...... நீயென்ன
காலமெனும் காலனா ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Jun-20, 8:04 pm)
பார்வை : 85

மேலே