ஒரு பொய்யாவது சொல் பெண்ணே

ஒரு பொய்யாவது சொல் பெண்ணே!
பெண்ணே!
நான் நோக்குங்கால்
நீ நிலம் நோக்க!
நான் நோக்காக்கால்
நீ எனை நோக்க
வாழும் வள்ளுவமாய்
நம் காதல்!
அகம் ஒன்று வைத்து
புறம் ஒன்று உரைப்பதாய்
அரிதாரமிட்ட
உன் உதடுகள்!
உன் கால் சதங்கை
ஓசைதனை மீண்டும் மீண்டும்
ஒளிபரப்பும்
இசைக் கோட்டமாய்
என் எண்ண ஓட்டங்கள்!
நீ கண்களைப் பேசவிட்டு
உன் மெளனத்தால்
என் இதயம் திருடுவதை
கண்காணிப்புக் கருவி போல்
பதிவிட்டுக் காட்டுவதாய் மனது!
உன் வாய் மொழியும்
பொய்களுக்குள்ளும்
குதூகலித்துக் களிப்பதாய்
என் பொழுதுகளின் செவிகள்!
நீ என்னுள்
பதித்த அன்பின் முதல் தடத்தை
ஆழ் மனத்தின் அடித்தளத்தில்
நம் காதலின் கலாச்சாரச் சின்னமாய்
கட்டிக் காப்பதாய் என் நேசம்!
சு.உமாதேவி