கணியன் பூங்குன்றனார்

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை அடுத்த மகிபாலன்பட்டி சாலையில் உள்ள ஒரு சிறு கிராமம் பூங்குன்றம் . இங்கு பிறந்த கணியன் பூங்குன்றனார் எழுதிய பழமையான பாடல் இது .

யாதும் ஊரே யாவரும் கேளிர் ..

இந்த முதல் வரி மட்டுமே நாம் அறிந்தது . பாடலின் எல்லா வரிகளும் வாழ்வின் தத்துவத்தைச் சொல்கிறது . முழு பாடலும் அதன் பொருளும் இதோ ...

யாதும் ஊரே : யாவரும் கேளிர் ,
தீதும் நன்றும் பிறர்தர வாரா ,
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ,
சாதலும் புதுவது அன்றே ,
வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே ,
முனிவின் இன்னாது என்றலும் இலமே
மின்னோரு வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொருது இரங்கும்வ மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது
திறவோர்க்காட்சியின் தெளிந்தனம்
ஆதலின் மாட்சியின் பேயோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே .

பொருள் :

எல்லா ஊரும் எனது ஊர் , எல்லா மக்களும் எனக்கு உறவினர் என்று நினைத்து அன்பின் வாழ்வின் அடிப்படை ஆதாரம் என்று வாழ்ந்ததால் இந்த வாழ்வு நமக்கு இனிமையானது , சுகமானது .

தீமையும் நன்மையையும் அடுத்தவரால் வருவதில்லை எனும் உண்மையை உணர்ந்தால் சக மனிதர்களிடம் விருப்பு வெறுப்பு இல்லா ஒரு சம நிலை சார்ந்த வாழ்வு கிட்டும் .

துன்பமும் ஆறுதலும் கூட மற்றவர் தருவதில்லை .மனம் பக்குவப்பட்டால் அமைதி அங்கேயே கிட்டும் .

பிறப்பு , இறப்பு இரண்டும் உண்டு . எதுவும் புதிதல்ல , இயற்கையானது , எல்லோருக்கும் பொதுவானது . இந்த உண்மையை உணர்ந்தும் உள் வாங்கியும் வாழ்ந்தால் எதற்கும் அஞ்சாமல் வாழ்வை ரசிக்கலாம் .
இந்த வாழ்க்கையில் எது எவர்க்கு , எப்போது ,என்ன ஆகும் என்று எவர்க்கும் தெரியாது . இந்த வாழ்க்கை நிலை யற்றது . அதனால் இன்பம் வந்தால் மிக்க மகிழ்வதும் வேண்டாம் . துன்பம் வந்தால் வாழ்க்கையை வெறுக்கவும் வேண்டாம் . வாழ்க்கையின் இயல்பை உணர்ந்து இயல்பாய் வாழவேண்டும் .

இந்த வானம் நெருப்பாய் மின்னலையும் தருகிறது . நாம் வாழ மழையையும் தருகிறது .இயற்கை அதன் பணியை அது செய்கிறது .ஆற்று வெள்ளத்தில் கற்களோடு அடித்து முட்டி செல்லும் படகு போல வாழ்க்கையும் சங்கடங்களில் அவரவர் ஊழ்படி அதன் வழியில் அடிபட்டு போய்க்கொண்டு இருக்கும் இது இயல்பு என மனத் தெளிவு கொள்ளல் வேண்டும் .

இந்த தெளிவு பெற்றால் பெரிய நிலையில் உள்ள பெரியவர்களை பார்த்து வியந்து பாராட்டவும் வேண்டாம் . சிறிய நிலையில் உள்ள வர்களை ஏளனம் செய்து இகழ்வதும் வேண்டாம் . அவரவர்க்கு அவரவர்கள் பெரியவர்கள் .

இதை விட வேறு எவர் வாழ்க்கைப் பாடத்தை சொல்லித் தரமுடியும் .

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (16-Aug-20, 8:53 am)
பார்வை : 222

மேலே