பாடும் நிலாவே
இதமான இசையென வந்து
ராகங்கள் பல நூறு தந்து
ரசிகர்கள் மனதில் நின்றவரே
மறைந்தும் மறையாமல் சென்றவரே
பாடல்களின் நயம் உணர்ந்து
பாத்திரத்தின் உயிர் புரிந்து
குரலிலே நவரசம் தந்தவரே
குழலிலும் இனிமையாய் நின்றவரே
காதல் பாடலிலோ கண்ணியம் கொட்டும்
காதலர்கள் எண்ணங்களும் கண் முன்னே நிற்கும்
வேதனை பாடல்களில் விழி நீர் புரள
தூண்டியே நிற்குமய்யா உங்கள் குரல்
காலத்தில் அழியாத கானங்களை
இதயக் கோலங்களாய் விதைத்துச் சென்றவரே
எங்கிருந்து வந்ததய்யா உமக்கு மரணம்
செல்வதற்கு மனமின்றிச் சென்றீரோ
எத்தனை எத்தனை ரசிகர்கள் இதயத்தில்
அழியாத சிம்மாசனம் உமக்குண்டு இதை
அறியாத காலனா உம்மை வென்றான்
கருணை இன்றியே உங்களை வென்றானே
நம்ப முடியவில்லையே நீங்கள் இல்லை என்று
ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு முத்து
முத்தான பாடல்கள் பல தந்த நீங்கள்
எங்களின் மிகப் பெரிய சொத்தையா
அழகான சிரிப்போடு அன்பு மொழி பேசும்
பாடும் நிலாவே ராக மாலிகையே
மண்ணில் பாடியது போதுமென்று
விண்ணில் பாட விரைந்தனையோ