ஊன்று கோலும் ஊன்று கோல்களும்
ஊன்று கோலும்
ஊன்று கோல்களும்
முதுமைக் காலத்தில் சிலருக்கு ஊன்று கோல் தேவைப்படும். அதற்கு அவர்கள் கடைகளில் வாங்கியோ இல்லை கைக்கு கிடைத்த கட்டைகளையோ பாவிப்பார்கள். ஆனால் மனிதர்கள் எல்லோருமே பாவிப்பது பல ஊன்று கோல்கள். இவைகளை நீங்கள் கடையில் வாங்க முடியாது. இவைகள் ஆண்டவன் அளிப்பது.
இந்த ஊன்று கோல்களில் மிகவும் பெரியது அப்பா அம்மா என்ற இரண்டு ஊன்று கோல்கள். அதை கொடுத்தவனே தெரிந்தோ
தெரியாமலோ தட்டி விட்டானென்றால் அவன் இன்னும் இரண்டு கோல்களை அளிக்க மறக்க மாட்டான். அவை தாத்தா பாட்டி அல்லது அண்ணன் அக்கா. அதுவும் இல்லை என்றால் உற்றார் உறவினர்.
இந்த ஊன்று கோல்களை பாவித்து நீங்கள் பள்ளி சென்றால் அங்கு கிடைப்பது ஆசிரியர்கள் என்ற ஊன்று கோல்கள். அவைகளை நீங்கள் பற்றிக் கொண்டால்
வாழ்க்கையில் பல படிகள் சுலபமாக ஏறிவிடலாம். இல்லையென்றால் கஷ்டப்
பட்டே ஏறவேண்டி வரும்
இதை எல்லாம் ஏறிய பின்பு
நீங்கள் இன்னும் ஏறவோ இறங்கவோ என வருவது தான் மனைவி என்ற ஊன்று
கோல். அந்த ஊன்று கோல் நன்றாக அமைந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிகளே.
இன்னும் பல படிகள் ஏறி வானவில்லைக் கூட
தொட்டுவிடுவீர்கள். இல்லை என்றால் இந்த இரண்டில் ஒன்று நடக்கும்.
1). நீங்கள் ஏறி வந்த கடைசிப் படிகளில் அப்படியே நின்று விடுவீர்கள். இல்லை
2) கீழே வீழ்ந்து விடுவீர்கள்.
அப்போது நீங்கள் இவ்வளவு
காலமும் மறந்திருந்த
இறைவன் கரு மேகங்களிடையில் தோன்றும் கதிரவன் போல் தோன்றுவான். அப்பொழுது
மாணிக்கவாசகர் அருளிய
" உன்னை சிக்கெனப் பிடித்தேன், நீ எங்கு செல்வது இனியே "
என்ற வாக்கை எண்ணி அவன் வழியை மறித்து உங்கள் மனதில் அமரவையுங்கள்.
அப்போது நீங்கள் கீழே விழவும் மாட்டீர்கள், நின்ற இடத்திலே நிற்கவும் மாட்டீர்கள்.
எட்டத் தெரிந்த அந்த வானவில்லை தொட்டே மகிழ்ந்திடுவீர். தொட்டவன் சொல்கிறான் நம்புங்கள்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்