இல்லை இல்லை

சாதிசாதி என்றுசொல்லி சரித்திரமும் படைப்பதில்லை!
நீதியில்லை நெறியில்லை நிம்மதியும் இங்கில்லை !
சாதிக்கும் திறனில்லை !தரித்திரமும் இறப்பதில்லை !
போதிக்க புத்தனிங்கு புதுப்பிறப்புக் கொள்வானோ ?

மதம்சொல்லி மானுடத்தை மாற்றுகின்ற போதினிலும்
இதயமதில் அன்பொன்றும் ஊற்றெடுத்துப் பிறப்பதில்லை !
பதங்கொண்டு மனமெதுவும் பண்போடு இருப்பதில்லை
பதவிக்கு ஓடுகின்ற கூட்டமிங்கும் குறையதில்லை !

அன்புவழி இங்கில்லை ! ஆதிக்கம் குறையவில்லை !
நன்னெறிகள் ஓங்கவில்லை! நடமாட வழியுமில்லை !
துன்பங்கள் தொலையவில்லை! வெற்றிபெற வாய்பில்லை !
முன்வந்து உழைக்கின்ற மானுடர்கள் இல்லைஇல்லை !

பன்முகமாய் மனமில்லை !பணமதனை வெறுக்கவில்லை!
இன்பமென்று ஏதுமில்லை !எதிர்காலம் தெரியவில்லை!
வன்முறைக்குத் தீர்வுமில்லை!வஞ்சனைக்கு அழிவுமில்லை!
ஒன்றாகும் மனமில்லை!உறவாடும் எண்ணமில்லை !

நேர்வழியில் போகவில்லை! நிம்மதியும் அங்குயில்லை !
பார்வையிலே தூய்மையில்லை ! பாதகமும் குறையவில்லை
போர்க்குணமும் மாறவில்லை! போக்கிரிகள் ஒழியவில்லை
தீர்வினுக்கு முயற்சியில்லை ! தீவினைக்கும் பஞ்சமில்லை!

விலைவாசி குறையவில்லை !வேதனைகள் நீங்கவில்லை !
கொலைக்குணமும் மாறவில்லை !குற்றங்களும் மறையவில்லை!
நிலையான எண்ணமில்லை !நாட்டுயர்வு நாட்டமில்லை!
மலையாக்கும் முயற்சியில்லை ! மேல்நாடோ வெறுக்கவில்லை!
********************************
முல்லை

முல்லை பூத்து மணக்கும் முல்லை
இல்லை அந்த அழுகுக்கு எல்லை !
வில்லை எடுத்து வேட்டை ஆட
கல்லும் அங்கே ஆயுத மாகும் !

ஐந்திணை தன்னில் ஒருதிணை முல்லை
பைந்தமிழ் பகன்ற நிலத்தின் எல்லை
காடும் காடு சார்ந்த நிலமும்
கூடிக் கிடந்தால் அதுவே முல்லை !

மாடும் ஆடும் மேய்த்திட உதவும்
பாடு பட்டால் பலவும் கிட்டும் .
வேடன் என்றும் ஆயர் என்றும்
ஆடவர் தன்னை அழைப்பர் அங்கு !

தச்சன் செய்த சிறுதேர் தன்னை
இச்சை கொண்டே இழுப்பர் சிறுவர்
செம்மண் நிலத்தில் கிணற்றைத் தோண்டி
அம்மண் வாழும் மக்கள் பருகுவர்

காட்டைத் திருத்தி கார்மழைக் கண்டு
மாட்டைக் கட்டி மண்ணை உழுது
வரகினை விதைத்து விளைவதை விற்பர்
எஞ்சிய விளைவை பொருளுக்கு விற்று

கரவை மாட்டை வாங்கி வளர்த்து
செல்வமாய் கொண்டு செழிப்பினில் வாழ்வர்

ஆட்டை மேய்ப்பர் மாட்டை மேய்ப்பர்
ஆட்டுக் கிடையின் அருகினில் படுப்பார்
தாக்கிட வந்திடும் நரிகளை விரட்ட
தீக்கடைக் கோலில் தீயினைக் கொளுத்தி
நாக்கினைச் சுழற்றி சீழ்க்கை அடிப்பர்!

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (31-Oct-21, 1:29 pm)
பார்வை : 127

மேலே