சிறியார்மேற் செற்றங் கொளல் இன்னா - இன்னா நாற்பது 37
இன்னிசை வெண்பா
நறிய மலர்பெரிது நாறாமை யின்னா
துறையறியா னீரிழிந்து1 போகுத லின்னா
அறியான் வினாப்படுத லின்னாவாங் கின்னா
சிறியார்மேற் செற்றங் கொளல். 37
- இன்னா நாற்பது
பொருளுரை:
நல்ல மலரானது மிகவும் சிறந்த மணம் வீசாதிருப்பது துன்பமாகும்;
துறையின் ஆழம் அறியாதவன் நீரில் இறங்கிச் செல்வது துன்பமாகும்;
நூற்பொருள் அறியாதவன் அறிவுடையோரால் வினவப்படுதல் துன்பமாகும்;
அவ்வாறே, குணத்தால் சிறியவர் மீது சினங் கொள்வது துன்பமாகும்.
விளக்கம்:
நறிய - நல்ல, அழகுடைய, துறை - நீரில் இறங்குதற்கும் ஏறுதற்குமுரிய வழி,
அறியா நீர் என்பது பாடமாயின் அறியப்படாத நீர் என்க.
சிறியார் - வெகுளி செல்லுதற்குரிய எளிமையுடையார்; குழவிப் பருவத்தினருமாம்.