பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா - இன்னா நாற்பது 38

இன்னிசை வெண்பா

பிறன்மனையாள் பின்னோக்கும் பேதைமை யின்னா
மறமிலா மன்னர் செருப்புகுத லின்னா
வெறும்புறம் வெம்புரவி யேற்றின்னா வின்னா
திறனிலான் செய்யும் வினை. 38

- இன்னா நாற்பது

பொருளுரை:

பிறன் மனைவியைக் காமுற்றுப் பின் தொடரக் கருதும் அறிவின்மை துன்பம் தரும்;

வீரமில்லாத அரசர் போர்க்களம் செல்வதும் துன்பம் தரும்;

விரைந்து செல்லும் வேகமுடைய குதிரையின் சேணம் இல்லாத முதுகில் ஏறிப் பயணம் செல்வதும் துன்பம் தரும்;

செய்யும் கூறுபாடறியாத அறிவிலி செய்யுங் காரியமும் துன்பம் தரும்.

திறன் - அறிந்தாற்றிச் செய்யும் வகை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jan-22, 5:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

மேலே