செல்வ ரெனப்படு வார் மூவர் – திரிகடுகம் 70
இன்னிசை வெண்பா
காவோ டறக்குளந் தொட்டானும் நாவினால்
வேதம் கரைகண்ட பார்ப்பானும் - தீதிகந்
தொல்வதுபாத் துண்ணும் ஒருவனும் இம்மூவர்
செல்வ ரெனப்படு வார் 70
- திரிகடுகம்
பொருளுரை: சோலையை உண்டாக்குதலுடன் அறத்துக்குரிய குளத்தைத் தோண்டுவித்தவனும்,
நாவினால் ஓதி வேதத்தை முடிவுகண்ட அந்தணனும்,
தீய வழியைக் கடந்து தனக்கு இசையும் பொருளைப் பகுத்து உண்கின்ற ஒப்பற்ற இல்லறத்தானும் ஆகிய இம் மூவரும் செல்வத்தையுடையார் என்று கருதப்படுவார்.
கருத்துரை;
தோப்பும் குளமும் அமைத்தவனும் மறைநூலோதி யுணர்ந்தவனும், பிறர்க்குப் பகுத்துக் கொடுத்துண்ணும் இல் வாழ்வானும் உண்மைச் செல்வராவர் என்பது.