அஞ்சுபவோ வாக்கின் பயன்கொள் பவர் - நீதிநெறி விளக்கம் 69

நேரிசை வெண்பா

சொல்வன்மை உண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல்
நல்வினை கோறலின் வேறல்ல - வல்லைத்தம்
ஆக்கங் கெடுவ துளதெனினும் அஞ்சுபவோ
வாக்கின் பயன்கொள் பவர் 69

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

தன் சொல்லைக் கேட்கும் ஒருவர் அதன்படி நடப்பான் என்னும் தன்சொல்லின் திறனறிந்திருந்தால், அவ்வாறான சொற்றிறனைப் பயன் படுத்தாது வீணாகக் கைவிட்டு விடுவது, நற்காரியங்களுக்கு கேடு செய்தலினும் வேறாகாது.

சொல்வன்மையாற் பெறப்படும் பயனையறிந்தோர், விரைவில் தமது பொருளெல்லாம் கெட்டொழியும் ஆயினும் அதற்காக அஞ்சுவரோ? அஞ்சார்.

விளக்கம்:

சொல்வன்மை - பிறர்க்குந் தமக்கும் பயன்படும் வகையிலும் பிறர் மதிப்பளிக்கும் நிலையிலும் பேசும் ஆற்றல்,

தம் சொல்லாற் பயனுண்டென்று தம்மை நாடித் தம் சொல்லுக்கு வேண்டி நிற்கும் தம்மின் எளியார்க்கு அன்னார் நலங்கருதித் தம் சொல்வன்மையைப் பயன்படுத்தாது விட்டாலும் நல்வினை குறைபாடுடையதாய் முடியும்.

சொல்வன்மையுடைய ஒருவரிடம் ஓர் எளியன் போய், "நீவிர் ஒரு சொல் சொன்னால் பிறர் எனக்கு வேண்டும் உதவி செய்வர்" எனக்கூறி அவன் குறையைச் சொல்லி வேண்டும் போது சொல்வன்மை யுடையான் அது செய்ய மறுப்பானாகில் அவன் தீவினையுறுதலும் உண்டெனப்படுகிறது..

"அறம் பெரிதறைதல், வாய்மை, கல்வி, தீமையில் திறம்பல், இன்மொழி இசைத்தல், வன்மொழி மறுத்தல்" இவை வாக்கின் பயன்.

கருத்து:

சொல்வன்மையாற் பெறப்படும் பயனையறிந்தோர் அப்பயனடைய வேண்டிச் சொல்வன்மையாற் செய்யக்கூடிய நன்மைகளை விரைவிற் செய்து நலம்பெறுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Mar-22, 3:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே