கஞ்சன் காமராஜன் ஷாப்பிங் மால் விஜயம்

ஒருமுறை கஞ்சன் காமராஜன் அவன் மனைவி 'செலவுகுறை
செல்வி' யுடன் ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்றிருந்தான். பார்க்கிங்
பகுதியில் காரை வைப்பதற்கு முன் காமராஜன் அங்குள்ள
பணியாளரிடம் கேட்டான் "பார்க்கிங் சார்ஜ் ஏதாவது உண்டா?".
பணியாளர் சொன்னார் "நீங்கள் நூறு ரூபாய்க்கு குறையாமல்
ஏதேனும் சாமான்கள் வாங்கினால், பார்க்கிங் சார்ஜ் பிரீ. அப்படி
இல்லையென்றால் போகும்போது நாற்பது ரூபாய் பார்க்கிங் சார்ஜ்
கட்டவேண்டும்." "ஓ, அப்படி போகுதா சங்கதி , சரி" என்று
சொல்லியவண்ணம் காமராஜன் காரை பார்க் செய்துவிட்டு,
மனைவியுடன் மாலுக்குள் நுழைந்தான். நான்கு மாடிகளிலும் எங்கு
பார்த்தாலும் கடைகள், எங்கே நுழைவது என்றே இருவருக்கும்
தெரியவில்லை. எல்லா பக்கமும், மேலும் கீழும் நோட்டம்
விட்டபிறகு, இருவரும் ஒரு புடவை கடையில் நுழைந்து
புடவைகளை பார்க்க ஆரம்பித்தனர்.
'செலவுகுறை செல்வி' உன்னிப்பாக புடவைகளை
பார்த்துக்கொண்டிருக்கையில், காமராஜன் புடவை அணிந்து உள்ளே
வருபவர்களை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தான். சுமார்
அரை மணி நேரம் கழித்து 'செலவுகுறை செல்வி' காமராஜிடம்
"ஏங்க,இந்த புடவை ரொம்ப நன்றாக
இருக்கிறது.வாங்கிக்கொள்ளட்டுமா?" என்று கேட்டாள். காமராஜன் '
இவ்வளவு நேரம் எவ்வளவோ புடவைகளை உன் உடம்பில்
போர்த்திக்கொண்டு கண்ணாடிமுன் நின்று அழகு பார்த்துவிட்டாய்.
அப்போது நான் புது புடவையில் உன்னை கொஞ்சம் போட்டோவும்
பிடித்துவிட்டேன். இனி வீணாக எதுக்கு இந்த புடவையை
வாங்கணும். எப்படியும் உன் வீட்டில தீபாவளி மற்றும்
நவராத்திரியைத் தவிர , விநாயக சதுர்த்தி, ஆடி அமாவாசை,
மஹாத்மா காந்தி பிறந்தநாள், தைப்பூசம், சித்திரை திருவிழா,
காமராஜர் பிறந்த நாள் (பயப்படாதே, பெருந்தலைவர் காமராஜ்
பிறந்த நாள்) இப்படி பட்ட நாட்களிலும் உனக்கு புடவை வாங்கி
தந்துடறாங்க . அப்புறம் எதுக்கு அனாவசிய செலவு?
அதற்கு 'செலவுகுறை செல்வி' "சரி அப்படி என்றால், விலையை
விசாரிப்போம், மிகவும் குறைந்த விலையாக இருந்தால்
வாங்கிக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு, அந்த புடவையின்
விலையை விசாரித்தார்கள். புடவை விலை 5500 ரூபாய் என்று
கேள்விப்பட்டவுடன், இருவரும் விலை சொன்னவரை முறைத்து
பார்த்தார்கள். காமராஜன் கேட்டான் "ஏம்பா, இந்த
புடவைக்குதான் விலையை சொல்கிறாயா இல்லை இந்த
கடைக்கும் சேர்த்து விலை சொல்கிறாயா? ஆயிரம் ரூபாய்
புடவையை கூசாமல் 5500 ரூபாய் என்கிறாயே?" என்று கேட்டவுடன்
அந்த விற்பனை பணியாளர் "ஏன்யா, கஞ்சப்பயல்கள் எல்லாம் கூடி
கல்யாணம் பண்ணிக்கிண்டு எங்க உயிரை வாங்குறீங்க. மொதல்ல
இடத்தை காலி செய்யுங்க" என்று கடிந்து கொண்டபின் இருவரும்
அங்கிருந்து மெல்ல நழுவி வெளியே வந்தனர். அவர்கள்
பின்னாலேயே அந்த விற்பனை பணியாள் வர ஆரம்பித்தவுடன்
இருவரும் முதல் மாடியில் மற்ற கடைகளை பார்க்காமல்
மூன்றாவது மாடிக்கு எஸ்கலேட்டர் மூலம் விரைந்தனர். அதன்மீது
செல்லும்போது, எங்கே அந்த புடவை கடை விற்பனை பணியாள்
தம்மை தொடர்ந்து வருகிறாரா என்று ஓரக்கண்ணால் பின்னல்
பார்த்த வண்ணம் இருந்தாள் 'செலவுகுறை செல்வி.
தன்னுடைய அழகை கண்டு மயங்கி அந்த பணியாள் பின்னால்
தொடர்ந்து வருகிறானோ என்று கூட அவளுக்கு சந்தேகம் வந்தது.
ஆனால் காமராஜனுக்கு தெரியும், அவர்கள் மேல் இருக்கும்
வெறுப்பு கோபம் காரணமாகத்தான் அந்த பணியாளர் அவர்களை
தொடர்கிறார் என்று. அந்த பணியாள், புது புடவை சரக்கை
எடுத்துவர, பக்கம் உள்ள கோடோனுக்கு செல்கிறான் என்பதை
இவர்கள் அறிய வாய்ப்பில்லை

மூன்றாவது மாடியில் கிட்டத்தட்ட ஐம்பது கடைகள் இருந்தது.
எதில் நுழைவது என்று இருவருக்கும் குழப்பம் ஏற்பட்டு பின்னர்
ஒரு ஐம்பது காசை எடுத்து 'பூவா தலையா' போட்டு பார்த்து
(உடனடியாக அந்த பைசாவை ஜாக்கிரதையாக பர்சில்
வைத்துக்கொண்டு) அதன்படி ஒரு கடைக்குள் நுழைந்தனர். அது
பெண்கள் உடுத்தும் சல்வார் கமீஸ் உடைகள் கடை. அந்த மாதிரி
சல்வார் கமீஸ் துணிகளை இதுவரை 'செலவுகுறை செல்வி'
பார்த்ததே இல்லை. கஞ்சன் காமராஜன் அப்படிப்பட்ட உடைகள்
அணிந்த பெண்ணையும் பார்த்ததில்லை. வெகு நேரம், பலவித
வண்ணங்களில் ஏராளமான சல்வார் கமீஸ் பார்த்தபின் ஒரு
குறிப்பிட்ட ஆடை மிகவும் நன்றாக இருக்கிறது என்று இருவரும்
கருதியதால் அதன் விலையை விசாரித்தனர். ரூபாய் 2000 மட்டுமே
என்று விற்பனை பெண் சொன்னதுதான் தாமதம். உடனே
காமராஜன் "என்னம்மா, பகல் கொள்ளையாக இருக்கிறது.
வெளியில் வேறு கடைகளில் இந்த விலைக்கு மூன்று ஜோடிகள்
கிடைக்கும் என்றவுடன் அந்த பெண் " நாங்களும் இரண்டாயிரம்
ரூபாய்க்கு மூன்று ஜோடிகள் தான் தருகிறோம்" என்றவுடன்
செலவுகுறை செல்வி கொஞ்சம் அதிர்ந்து போய், 'ஐந்து ஜோடிகள்
கொடுத்தால் வாங்குகிறோம்' என்றாள். அந்த பெண் " உங்க கணவர்
தானே சொன்னார், இந்த விலைக்கு வெளியே மூன்று ஜோடிகள்
கிடைக்கும் என்று, பிறகு ஏன் இப்படி கூச்சமில்லாமல் ஐந்து
ஜோடிகள் கேட்கிறீர்கள்" என்றவுடன் இருவருக்கும் கோவம் வந்து,
விருட்டென கடையை விட்டு வெளியே வந்துவிட்டனர்.
காமராஜனுக்கு அந்த விற்பனையாளர் பெண் தன்னை
தொடருவதைப்போல ஒரு பிரமை தோன்றியது. அந்த
விற்பனையாளர் பெண் "இந்த மாதிரி கஞ்ச சாவு கிராக்கிகள் வந்து
அவ்வப்போது நம்மை தாக்கிவிட்டு போகிறதுங்க" என்று
சொன்னதை கேட்க இருவரும் அருகில் இருந்தால்தானே!

கஞ்சன் காமராஜனுடைய செல்போன் உறை பிய்ந்து போய்விட்டது.
அப்படியே வைத்து உபயோகிக்கலாம் என்றால் செல்போன் மிகவும்
வழவழவென்று இருக்கிறது. அதனால் வேறு வழியில்லாமல்,
இரண்டு வருடத்திற்கு முன்பு , 80 ரூபாய் உறையை, பத்து
நிமிடம் பேரம் செய்து 70 ரூபாய்க்கு வாங்கினான் காமராஜன்.
செல்போன் கடைக்கு சென்று தனது செல்போனுக்கு ஏற்ற
உறையை வாங்கி பார்த்தான். பார்க்க நன்றாக இருந்தது. அதன்
விலை 120 ரூபாய் என்றதும், பகீரென்றது இருவருக்கும்.
'செலவுகுறை செல்வி' "ஏங்க, எங்களை பார்த்தால் காதில் பூ
வைத்திருப்பவர்கள் மாதிரி தெரியுதா? அதிகமா இருந்தாக்கூட இந்த
உறைக்கு 50 ரூபாய்க்கு மேலே ஒரு பைசா கொடுத்தாலும்
அநியாய விலைதான்" என்றவுடன் அந்த விற்பனை பணியாளர்
"நீங்க காதிலேயும் பூ வைக்கல, தலையிலும் பூ வைக்கல, பாத்தா
இருவரும் 'பத்தாவது பெயில்' மாதிரி தெரியுது, வெளியே "பிக்ஸ்ட்
ரேட்" என்று போர்ட் போட்டிருப்பதை படிக்காமல் கடை உள்ளே
வந்து பேரம் பண்ணுறீங்க. உங்களை போன்ற ஆட்களை
மாலுக்குள்ளேயே விடக்கூடாது" என்று சத்தம் போட்டவுடன்,
கஞ்சன் தம்பதிகள் ஓடாத குறையாக ஓடிப்போய் எஸ்கலேட்டர்
மேல ஏறி, அந்த படிக்கட்டுகளிலும் கூட ஓட்டமாக ஓடி நாலாவது
மாடிக்கு போய் சேர்ந்தனர்.
அங்கே பார்த்தால் 'புட் கோர்ட்' என்று பெரிதாக போர்ட்
போட்டிருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
'செலவுகுறை செல்வி' "அடாடா, எவ்வளவு உணவகங்கள் உள்ளே.
எல்லாவித உணவு வகைகளும் இருக்கிறதே. நிச்சயமாக இங்கே
நாம் ஏதாவது சாப்பிட்டுத்தான் செல்லவேண்டும். மதியம்
ஒருமணிக்கு வீட்டில் சாப்பிட்டது, மணி இப்போ இரவு ஒன்பது, பசி
பிச்சிட்டு போகுது." என்றதும், காமராஜன் "எனக்கும் தான். நானும்
உன்கூடத்தானே சாப்பிட்டேன். இன்னிக்குன்னு பாத்து நீ சின்ன
டம்பளரில் அரிசி அளந்து சமைத்ததால், இருவருக்குமே குறைவான
சாப்பாடுதானே கிடைத்தது. நிச்சயமாக நாம் இங்கு சாப்பிட்டு
விட்டுத்தான் வீடு திரும்பணும்" என்றான்.
ஒவ்வொரு கடையாக பார்த்துக்கொண்டு சென்றார்கள்.
காமராஜனுக்கு 'பிஸ்ஸா' சாப்பிடவேண்டும் என்று ஆசை வந்தது.
இருவரும் ஒரு pizzaa கடைக்குள் நுழைந்து அமர்ந்தனர். ஒரு
வெய்ட்டர் அவர்களிடம் மெனு கார்டை கொடுத்து சென்றான்.
இருவரும் அதை பார்க்க துவங்கினார்கள். குறைந்த விலையாக
பிஸ்ஸா 300 ரூபாய் என்று பார்த்தவுடன் காமராஜன்
"வெளியிலே இதைவிட நிச்சயமாக நூறு ரூபாய் குறைவாக
இருக்கும். இந்த மாதிரி மாலில் எல்லாத்துக்குமே விலை ரெண்டு
மடங்குதான் இருக்கும்" என்று சொல்லி முனகியது 'செலவுகுறை
செல்விக்கு சரியாகவே பட்டது. வயிறு அப்படி பசித்தாலும்
இருவரும் பொறுத்துக்கொண்டு வெளியே வந்துவிட்டனர்.
பார்க்கிங்கு சென்று வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே
வருகையில் கேட்டில் இருந்த ஊழியர் "நாற்பது ரூபாய் பார்க்கிங்கு
கொடுங்க "என்றதும் காமராஜனுக்கு பயங்கரமாக கோவம் வந்தது.
"உள்ளே ஒவ்வொரு கடையிலும் கொள்ளை அடிப்பது
போதாதென்று, நீங்களும் இங்கே பார்க்கிங் என்ற பெயரில் பகல்
கொள்ளை அடிக்கிறீங்களா? எங்க ஏரியாவில் பார்க்கிங்கு பத்து
ரூபாய் தான். போனால் போகிறது, பதினைந்து ரூபாய்
வைத்துக்கொள்" என்று பதினைந்து ரூபாய் நோட்டை அவரிடம்
திணித்தபோது அந்த பணியாளர் " நாற்பது ரூபாய் கொடுத்தால்தான்
நீங்கள் வண்டியை வெளியில் எடுத்து செல்லமுடியும்" என்று
கறாராக சொன்னவுடன், தம்பதிகள் வாழ்க்கையே வெறுத்து
போனார்கள். வேறு வழி இன்றி நாற்பது ரூபாயை முனகியபடியே
கொடுத்துவிட்டு, மீண்டும் மீண்டும் அந்த கேட் பணியாளரை
முறைத்து முறைத்து பார்த்தார்கள் கஞ்சன் தம்பதியினர். கஞ்சன்
காமராஜன் அழாத குறையாக ' மாலில் ஒன்றும் வாங்கவில்லை,
ஒன்றும் சாப்பிடவில்லை, ஆனால் நாற்பது ரூபாய் தண்ட
செலவு" என்று மனைவியிடம் முனகியவுடன் 'செலவுகுறை
செல்வி' 'புடவை கடையில் நல்ல திட்டு வாங்கி சாப்பிட்டோம்,
செல்போன் கடையில் காதுக்கு விருந்து சாப்பிட்டோம்' என்று
சொன்னதும் இருவரும் சிரிக்கமுடியாமல் சிரித்தனர்.
வெளியில் கொஞ்ச தூரத்தில் ஒரு தெரு வண்டியில் தோசை சுட்டு
விற்பனை செய்வதை பார்த்தவுடன் செலவுகுறை செல்வி "
இங்கேயே தோசை வாங்கி சாப்பிட்டு போகலாம்" என்றாள்.
வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் தோசை வண்டி அருகில்
சென்று அங்குள்ள பெஞ்சில் அமர்ந்தனர். 'ரெண்டு தோசை'
என்று கஞ்சன் சொன்னவுடன் தோசை போடுபவர் "இந்த போர்டுல
போட்டிருக்கு பாருங்க. முப்பது தோசை வகைகள், என்ன தோசை
வேண்டும்? கேட்டார். செலவுகுறை செல்வி "இருப்பதிலேயே எது
மிகவும் விலை குறைவோ அந்த தோசை போதும்' என்றவுடன்,
அவர் இரண்டு பிளைன் தோசையை தோசை கல்லில் சுய்யுன்னு
ஊற்றினார். பேருக்காக அரை ஸ்பூன் எண்ணெயை அதற்கு
காண்பித்தார். முப்பது செகண்டில் தோசைகளை தோசை
திருப்பியால் எடுத்து ஒவ்வொரு தட்டில் ஒன்று வைத்து, கொஞ்சம்
தண்ணீர் சட்னியையயும், அதன் மேலே கொஞ்சம் தண்ணீர்
சாம்பாரையும் தெளித்து இருவருக்கும் கொடுத்தார். இருவருக்கும்
நல்ல பசி என்பதால், இன்னும் கொஞ்சம் சட்னியும் சாம்பாரும்
கேட்டார்கள். இந்த முறை மிகவும் குறைவான அளவு இருவருக்கும்
சட்னியும் சாம்பாரும் கிடைத்தது. காமராஜன் "இன்னும் கொஞ்சம்
சட்னி சாம்பார் ஊத்துங்க" என்றதும் அவர் "முப்பது ரூபாய்
தோசைக்கு எவ்வளவு தடவை ஊத்தணும். மத்த
கிராக்கிகளுக்கெல்லாம் வேணாமா? என்று சொல்லி மீண்டும்
ஊற்றவில்லை. இருவரும் ஒருவர் காதில் இன்னொருவர் தோசை
சுடுபவரை சொற்களால் சுட்டு எரித்தனர். இருவருக்கும் இன்னொரு
தோசை சாப்பிடவேணும் போல் இருந்தது. செலவுகுறை செல்வி
தோசை சூடுபவரிடம் "எங்களுக்கு இன்னொரு தோசை வேண்டும்.
மொத்தம் நாலு தோசை சாப்பிடுவதால், 120 ரூபாய்க்கு பதில் நூறு
ரூபாய் போட்டுக்குறீங்களா? என்றதும் அவர் "ஏம்மா, ஏதோ பாக்க
கொஞ்சம் ரீசெண்டா இருக்கீங்க. ஏதோ கஷ்டத்துக்கு நாலு தோசை
சுட்டு வித்து சம்பாதிக்கிறேன். வெளியே ஹோட்டல்ல போனா
அம்பது அறுவதுன்னு கொடுத்து தோசை சாப்பிடுறீங்க. நல்ல
கெட்டியா மாவு ஊத்தி பண்ண தோசைக்கு முப்பது ரூபாய் கூட
தர்லைன்னா எப்படிங்க கட்டுப்படியாகும்? என்ன பண்ண முடியும்.
மழை பெஞ்சு விட்டதுக்கப்புறம் விற்பனையும் கம்மி. சரி,
போனா போகுது. ஒரு பத்து ரூபாய் கம்மியா தாங்க" என்று
சொல்லி இன்னும் இரண்டு தோசைகளை ஊற்றதொடங்கினார்.
கஞ்சன் தம்பதியினர் ஒருவரை பார்த்து ஒருவர் வெற்றி
பெருமிதத்தில் சிரித்துக்கொண்டனர். அந்த முறை காமராஜன்
எக்ஸ்ட்ரா சாம்பார் சட்னி கேட்டவுடன் , தோசைகாரர் சாம்பார்
அண்டாவையும், சட்னி பாத்திரத்தையும் அவர்கள் பக்கத்தில்
கொண்டு வைத்துவிட்டார்.
தோசை சாப்பிட்டு முடித்து பணத்தை வாங்கிக்கொண்டு தோசை
காரர் சட்னி சாம்பார் பாத்திரங்களை எடுக்க சென்றவர், இரண்டு
பாத்திரங்களும் காலியாக இருப்பதைக் கண்டு "எங்கேயிருந்து
வந்தாங்கடா இந்த மாதிரி கஞ்சா பிசினாரிங்க. இப்போ கிராக்கி
வந்தா நான் என்னா பண்ணுவேன்.ஒரு சொட்டு கூட வைக்காம
வழிச்சி ஊத்திகினு பூட்டாங்களே" என்று ஒப்பாரி வைப்பதை
சரியாக காதில் வாங்காத மாதிரி, கஞ்ச தம்பதிகள் தமது சாம்பார்
சட்டினி வயிறை பிடித்துக்கொண்டு வண்டியில் அமர்ந்தனர்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (7-Sep-22, 7:28 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 109

சிறந்த நகைச்சுவைகள்

மேலே