உறுமாறும் எண்ணங்கள்
."உருமாறும்
எண்ணங்கள்"
சிறுகதை
அறந்தை ரவிராஜன்
இந்த வரனை எப்படியும் தன் பையன் அபிலாஷுக்கு முடித்து
விடவேண்டும்.உறுதியா இருந்தாள் கற்பகம்.
பையனுக்கு என்ன குறைச்சல்.
நல்ல ஸ்மார்ட் . லட்சத்தில் சம்பளம்.என்னமோ தெரியலை.
தள்ளிக்கொண்டே போகுது.அடுத்தடுத்து கல்யாண வயசுல இருமகள்கள் வேற.
ஒரு வேனை இதுதான் காரணமாக
இருக்குமோ!..பெரிய குடும்பம்னு.... கிளம்பும்போது அவளது வயதான மாமனார் மாமியார் " அபிலாஷுக்கு இந்த வரனை முடிச்சுடுமா"ஏக்கமாக சொன்னார்கள்.
ஒரு முடிவக்கு
வந்தவளாய் காரில் கிளம்பினார்கள்...
........
ஏங்க பெண் வீடு நெருங்கியாச்சா?
கணவனிடம் கேட்டாள்..கற்பகம்.
பதிலுக்கு அபிலாஷ் இதோ வந்தாச்சுமா. ..
காரை வீட்டிற்கு முன் நிறுத்தி விட்டு
உள்ளே சென்றார்கள்.
வாங்க வாங்க...
பெண்ணோட அப்பா பாந்தமாக
கூப்பிட்டு விட்டு ,
"சிவகாமி...காபி கொண்டுவா..
அப்படியே ரஞ்சனாவை வரச்சொல் என்றார்.
வந்தாள் ரஞ்சனா காபியுடன்.
நளினமான சிறு புன்னகையுடன்
எல்லோரையும் வணங்கிவிட்டு ஓர் ஓரத்தில் அம்மாவிற்கு பின் நின்றாள்.
ரஞ்சனா....மேக்கப் எதுவும் போடாமல் இயற்கையாகவே வெகு அழகாக இருந்தாள்.
பார்க்கச் சென்றவர்களுக்கு ஏக சந்தோசம்.
இந்த சம்மந்தத்தை விட்டு விடக்கூடாது என நினைத்தவளாய்
கணவனுக்கு ஜாடை காட்டினாள்.
பெண்ணோட அப்பாதான் பேசினார்.
என் பெண்ணை பற்றிய விவரங்ளை
பயோ டேட்டாவில் பார்த்திருப்பீங்க..
என் ஒரே பெண்ணைப்பற்றி சொல்லனும்னா...இந்தக்காகாலத்தில் இப்படி ஒரு பெண்ணை பார்க்க முடியாதுனு கர்வமா கூட சொல்வேன்..
சொல்லும்போது சற்றே தழுதழுத்தார்.
இந்த சம்பந்தத்தை விட்டுவிடக்கூடாதுனு கற்பகமே
பேசினாள்.
இதோ பாருங்க.. ரஞ்சனாவை ரொம்ப பிடிச்சிருக்கு..பையனைப்பற்றி
தெரிஞ்சிருக்கும்.
ஆனா சொல்றேன்னு பயப்படாதீங்க
எங்க குடும்பம் கொஞ்சம் பெருசு.
வீட்டில வயதான மாமனார் மாமியார்
கல்யாண வயசில பெண்ணுங்கன்னு மொத்தம் ஏழு பேர். அதனால நீங்க ஒன்னும் யோசிக்க வேண்டாம்.கல்யாணம்
முடிஞ்ச கையோட சென்னையிலே
தனிக்குடுத்தனம் வச்சிடுறோம்.
நாங்க தாம்பரம்தானுங்களே..
போய்வந்துக்கலாம்னு சொல்லிவிட்டு அவர்களை ஆர்வத்துடன் பார்த்தாள்.கணவர்
அதிர்ச்சியாக பார்த்தார்.
அப்பா ஒரு நிமிஷம்..ரஞ்சனாதான்
உள்ளே கூப்பிட்டாள்.
கற்பகம் வீட்டார் சந்தோசத்துடன்
காத்திருந்தனர்.
சற்று நேரத்தில் கவலை தோய்ந்த முகத்துடன் வெளியே வந்தார்.
மன்னிச்சிடுங்க! இந்த கல்யாணத்தில ரஞ்சனாவிற்கு விருப்பம் இல்லையாம்..
அபிலாஷ் உட்பட மூவரும் அதிர்ந்துதான் போனார்கள்.
கற்பகம் தன் கண் கலங்குவதை
தவிர்க்க முடியாமல் என்ன காரணம்
என்று வற்புறுத்தினாள்.
அது..வந்து..ஆரம்பிக்கும் முன்..
கொஞ்சம் இருங்கப்பா என ரஞ்சனாவே தொடர்ந்தாள்.
இதோ பாருங்கம்மா... என்னை பிடிச்சிருக்னு சொன்னதற்கு நன்றி..
ஆனா என்னோட விருப்பத்தையும்
சொல்லவிடுங்க..
என் அப்பா ஒரே பிள்ளை என் பாட்டிக்கு. அம்மாவும் அப்படித்தான்.நானும் ஒரே பிள்ளை அப்பா அம்மாவுக்கு...
அதனால...சின்ன வயசிலேர்ந்தே
எனக்குள் ஒரு ஏக்கம்..அண்ணன்
தங்கை பாசங்கிறதே தெரியாம வளர்ந்திட்டேன்.மாமா அத்தை உறவுனாவே எப்படினு உணரவே இல்லை.சித்தப்பா பெரியப்பா
சின்னம்மா பெரியம்மா..... ஊஹும்..தாத்தா பாட்டி என் சிறு வயதிலே போய்ட்டாங்க. எந்த உறவும் இல்லாம
கிட்டத்தட்ட ஒரு அனாதை மாதிரி
வாழ்ந்திட்டேன். என்னோட பிரண்ட்ஸ்
சொந்தங்ளைப்பற்றி பேசும்போது
அவ்வளவு பொறாமையாக இருக்கும்..
அப்ப முடிவு பண்ணியதுதான்....
கற்பகம் மிகவும் ஆர்வமானாள்.
மனது நிறைய ரஞ்சனா..
என்ன சொல்ல வருகிறாள்...
....ரஞ்சனாதான்...
எனக்கு கல்யாணம் அப்படினு ஒன்னு நடந்தா அது மாமனார் மாமியார் நாத்தனார் ..அது மட்டுல்ல
குழந்தைகள் நிறைஞ்ச வீடா கூடடுக்குடும்ப வாழ்க்கையாக இருக்கனும்..
என்னை மன்னிச்சிடுங்க...
வேகமாக உணர்ச்சிபொங்க பேசி முடித்தாள்.
பீரிட்டு வந்த அழுகை கட்டுப்படுத்த
முடியாமல் ரஞ்சனாவை
இல்லையில்லை மருமகளை
கட்டி அரவணைத்து நெற்றியிலே
முத்தமிட்டாள் கற்பகம்.