இல்லத்து வாரி சிறிதாயின் பெண்ஊரும் – நான்மணிக்கடிகை 100

இன்னிசை வெண்பா

ஏரி சிறிதாயின் நீர்ஊரும்; இல்லத்து
வாரி சிறிதாயின் பெண்ஊரும்; மேலைத்
தவம்சிறி தாயின் வினைஊரும்; ஊரும்
உரன்சிறி தாயின் பகை. 100

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

குளம் சிறிதானால் அதிலுள்ள நீர் வற்றி விடும்.

வீட்டில் வருமானங் குறைவானால் மனையாள் நிலை கடந்து போவாள்.

முற்பிறப்பின் நல்வினை குறைவானால் தீவினை பெருகும்.

ஒருவன் வலிமை சிறிதானால் பகைவர் மேற்கொண்டு பெருகுவர்.

விளக்கம்:

வாரி : இடையறா தொழுகுதலென்னும் பொருளால் வருவாய்க்காயிற்று. தவமென்னுங் குறிப்பால் வினையைத் தீவினையென்று உரைக்கப் படுகிறது.

வாரி: Income, resources; வருவாய்,

ஊர்தல் - 1.வற்றி விடும், 2.நிலை கடந்து போவது, 3.தீவினை பெருகுதல், 4.பகை பெருகுதல் என்று பல பொருள்படும்.

tamilvu/library தளத்தின் அகராதிகள் பகுதியில் Tamil Lexicon Vol - 1 to 7 சொடுக்கி அனைத்துச் சொற்களுக்கும் பொருள் பார்க்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Dec-22, 12:39 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 62

சிறந்த கட்டுரைகள்

மேலே