மனிதன்-கடவுள்-விதி
ஒருவர் எவ்வளவு முயற்சி செய்தும் அவரை, விதி எனப்படும் கண்ணுக்குத்தெரியாத ஒன்று ஏதாவது படுத்திய வண்ணமே உள்ளது. இதை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. இதை விளக்குவது ஒரு அசாத்தியம் போலத்தான் தெரிகிறது. எனக்கு இப்போது உள்ள பெரும் குழப்பம் , கடவுள் என்பது வேறா விதி என்பது வேறா என்பது தான்.
என் வாழ்க்கையை எழுதிய அல்லது எழுதி திருத்திவரும் தலைவிதியின் தலைவிதி கூட சரியில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.
நல்லவன் வாழ வேண்டும் என்பது தான் இயற்கையின் நியதியாக இருக்க வேண்டும். இயற்கையின் நியதி என்பது கடவுளின் நியதி தானே.
ஆயினும் உலகில் நடக்கின்ற நிகழ்வுகளைப்பார்க்கையில், வாழ்க்கை ஒரு லாட்டரி சீட்டு போலத் தான் தோன்றுகிறது . பட்டால் பாக்கியம் இல்லை என்றால் லேக்கியம். இதுதான் வாழ்க்கையை மிகவும் எளிமையாகவும் சுருக்கமாகவும் விளக்கக்கூடிய வரையரை.
இதில் நல்லவர் கெட்டவர் போன்ற வித்தியாசங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. கொலை செய்பவன் கூட குறட்டை விட்டுத் தூங்குகிறான். தர்மத்தை மட்டுமே சிந்திப்பவனும், தர்மத்தையே செய்பவனும் கூடத் தூக்கம் இன்றித் தவிக்கிறான். இப்படி இருப்பின் பின்னர் எவ்வாறு ஒருவருக்கு உண்மையான கடவுள் பற்று இருக்க முடியும்?
கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் நம்மை சமுதாயம் மதிக்காது என்ற பயம் தான், நாம் பலரும் கடவுள் நம்பிக்கை கொள்ள மிகவும் முக்கியமான காரணம். சிலருக்கு பல விஷயங்கள் நன்மை தருவதாக அமைந்தால், அவர் கடவுள் நம்பிக்கையுடன் வாழ்வது இயல்பே. வேறு சிலருக்குப் பல விஷயங்கள் தீமை தருவதாக இருப்பின் அவர் கடவுளை நம்பலாம் அல்லது நம்பாமலும் இருக்கலாம். ஒருவேளை கடவுளை நம்பவில்லை என்றால் எங்கே இன்னும் தீமைகள் அதிகரிக்குமோ என்கிற பயமே அவர் கடவுள் நம்பிக்கை கொள்வதற்குக்காரணமாக இருக்கும் என்பது எனது கணிப்பு.
இன்னொரு கோணத்தில் நோக்கினால் , கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது தான் சிறந்தது என்று தோன்றுகிறது. இந்தக் கொள்கையுடன் வாழும்போது ஒருவர் தனது சுதந்திரத்தைச் சுதந்திரமாக பயன்படுத்தி வாழ்க்கை அனுபவங்கள் பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. அதைத்தவிர்த்து ஒவ்வொரு கணமும் கடவுள் எனும் சக்தி நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற உணர்வில் வாழும்போது, ஒருவர் நிச்சயமாக தனது முழுச் சுதந்திரத்தை உபயோகிக்க இயலாது. இப்படி வாழும்போது ஒருவர் சமூகத்திற்காகவும், பிறருக்காகவும் பயந்து பயந்து ஒடுங்கித்தான் வாழ முடியும்.
இப்போது நான் இக்கட்டுரையின் இறுதிக்கு வருகிறேன். நான் சொல்லவிழைவது என்னவெனில் " நீ கடவுளை நம்பினால், நம்பிவிட்டுப் போ. நம்பவில்லையென்றாலும் குடி முழுகப்போவதில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் மனசாட்சி என்ற ஒன்று இருப்பதை எவராலும் புறக்கணிக்கமுடியாது. கடவுள் என்ற ஒன்றில் நம்பிக்கை வைத்தாலும் வைக்காவிட்டாலும் இந்த மனசாட்சியை மதித்துப் புரிந்து கொண்டு, அதன் பேச்சுப்படி வாழ்வது தான், மனித வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதது என்றே நான் நினைக்கிறன்.