தாமதமான அங்கீகாரம்

தாமதமான அங்கீகாரம்

மரணம் நெருங்கி விட்டதை மனம் உணர்ந்து கொண்டது, என்றாலும் தன் மரணம் இங்கு யாருக்கும் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்த போவதில்லை என்பதும் சற்குருவின் மனது புரிந்து கொள்ளத்தான் செய்தது.
தன்னுடைய மரணம் தன் மனைவி முதல் கொண்டு பிள்ளைகள் வரைக்கும் ஒரு வித விடுதலை என்னும் எண்ணம் கூட தோற்றுவிக்கலாம். உண்மைதானே, இதுவரை அவரால் இந்த குடும்பத்துக்கு என்ன உபயோகம் கிடைத்திருக்கிறது?
திருமணம் ஆன புதிதில் தன் புருசன் “வாத்தியார் உத்தியோகம்” பார்க்கறாரு என்று அக்கம் பக்கம் எல்லாம் சொல்லி சந்தோசப்பட்ட மனைவி, மூன்றே வருடத்தில் வேலையை விட்டு ‘இலக்கிய சேவை’ செய்ய போகிறேன் என்று வீட்டில் உட்கார்ந்து கொள்ளுவான் என்று எதிர்பார்த்திருக்கமாட்டாள்.
தன் வயிற்றில் வளரும் குழந்தைக்காகவாவது ஏதாவது ஒரு வேலைக்கு செல்லுங்கள் என்று ஆன மட்டும் சொல்லி பார்த்தவள்தானே. அதன் பிறகு அப்பா, சகோதரர்கள், போதாதுக்கு மாமனார் அவரது உறவு வகையறா எல்லாம் வந்து காதில் ஓதி எந்த பிரயோசனமுமில்லாமல் ஒதுங்கி கொண்டதுதான் மிச்சம்.
வருமானமில்லா செலவு என்பது எவ்வளவு பெரிய சேமிப்பையும் கரைந்து போகத்தானே செய்யும். இவரது போக்கு தெரிந்து கொண்ட சகோதரர்கள் தந்தையை சரி கட்டி சொத்தை பிரித்து அவரவர் பங்கிற்கு வாங்கி சம்பந்தமில்லாதவர்களாக ஆக்கி கொண்டார்கள்.
கடைசி மகனின் ‘இலக்கிய’ தாகத்தால் அவன் குடும்பம் தடுமாறுகிறதே என்று மனம் பொறுக்காமல் அவனையும் ‘மசக்கையாய்’ இருந்த மருமகளையும் தன்னுடனே வைத்து பார்த்து கொண்டார் இவரது தந்தை. தனக்கு ஒதுக்கி வைத்த பங்கை வைத்து இவர்களுக்கும் சோறு போட்ட தந்தை அவனது பங்கான நகரின் மையத்தில் இருந்த கடையயையாவது தினமும் போய் பார்த்துக்கொள் என்று அனுப்பி வைத்தார்.
ஐந்தாறு மாதம் ஒழுங்காக போனதோடு சரி, அதன் பின் இலக்கிய கூட்டம், அப்படி இப்படி என்று அலைய ஆரம்பித்து விட்டபடியால், கடையின் முதலாளி வருகையையும், தொழில் விட்டேத்தியயும் கண்டு கொண்ட ஊழியர்கள் கடைசியில் மொத்தமாக இருந்த சொத்தான கடையை விற்று கடனை அடைக்கவேண்டிய சூழ்நிலைக்கு இவர்களை கொண்டு போய் விட்டார்கள்.
அதற்குள் இவர் கிட்டத்தட்ட, நிறைய புத்தகங்கள் எழுதி எழுதி, பெரும் செலவு செய்து அவற்றை பதிப்பித்து அவைகள் யாவும் எங்கும் விலை போகாமல் அவரது வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கிடக்கும் நிலைமைக்கு சென்று விட்டது. காரணம் காதலும், காமரசம் சொட்டும் கதைகளும், மர்ம, துப்பறியும் கதைகளும், இலக்கிய உலகில் புகுந்து தூள் பரத்தி கொண்டிருக்க, இவர் இலக்கியத்தை சங்ககாலம், நிகழ்காலம், என்று ஆரம்பித்து நூல்களை எழுதி குவித்தால், யார் சீந்துவார்? அதே நேரத்தில் குடும்ப விருத்தி மட்டும் தவறாமல் நடந்து குழந்தைகள் மூன்றாகியிருந்தது.
என்றாவது ஒரு நாள் தன்னை இந்த இலக்கிய உலகம் பெரும் மனிதனாய் மதிக்கப்போகிறது என்னும் எண்ணம்,காலம் செல்ல செல்ல இவருக்குள் கரைந்து கொண்டே வந்தது. ஆனால் அதற்குள் வறுமை என்னும் படர் தாமரை இவர்களை சுற்றி இறுக்கி மூச்சடைக்க வைத்து விட்டது.
அவருடைய மனைவியோ கிடைத்த வேலை செய்து, கிடைத்த சம்பாத்தியத்தில் மூன்று குழந்தைகளையும் கவனித்து, அத்துடன் போனால் போகிறது என்று இவரும் ஒட்டி உண்டு வாழ்ந்து கொண்டுதான் இருந்தார். எப்படியோ ஒரு கட்டத்தில் மூத்தவன் தலையெடுக்க, கொஞ்சம் நிமிர்ந்தது அவர்களின் குடும்பம். இருந்தாலும் அவனின் மரியாதையை இவர் என்றோ இழந்திருந்தார்.
அன்றாட வறுமை குறைந்து ஓரளவுக்கு பசியில்லாமல் இருக்கமுடியும் என்னும் நிலையில் முதல் பையனின் வருமானத்தில் இருந்த குடும்பம், இரண்டாவது பெண் அரசு தேர்வில் தேறி நல்ல ஒரு வேலையை பெற்றதும் ஏற்றம் காண ஆரம்பித் திருந்தது. சற்குரு அப்பொழுதும் கூட குடும்பத்தின் அதிகபட்ச உறுப்பினர் என்னும் அந்தஸ்தில் ஒரு மூலையில் உட்காரவைக்கப்பட்டு, போட்டதை உண்டு வாழ்ந்து கொண்டிரு, என்னும் நிலைமைக்கு சென்றிருந்தார். அதற்குள் இவர்கள் குடும்பம் வசதியாக சொந்த வீடு கட்டி செல்லும் நிலைமைக்கு வந்து விட்டது. இவரை எங்கு வைப்பது என்று மனைவி, மகன்,மகள் கூடி பேசி கடைசியில் அந்த வீட்டின் கடை கோடியில் ஒரு சிறிய அறையில் போய் கிட, என்று அனுப்பி விட்டார்கள்.
கடைசி பெண்ணும் நல்ல படிப்புடன் வெளிவர முதலாமவனுக்கு, அடுத்தவளுக்கும் திருமணம் செய்வித்து மகிழ்ந்தது குடும்பம். இதில் இவர் ஒரு உறுப்பினர் என்னும் முறையில் மட்டும் உறவுகளிடமும், சுற்றத்தாரிடமும் அடையாளத்துக்காக காண்பிக்கபட்டிருந்தார். எந்தவிதமான அதிகார வரம்புகளோ, உரிமையோ எள்ளவும் இவருக்கு கொடுக்கப்படவில்லை.
சற்குரு கொஞ்சம் கொஞ்சமாக தன் உலக பற்றுதலை விட்டு விலகி கொண்டு இருந்தார். அவருடைய மனதின் எதிர்பார்ப்பு இளமையில் பிரகாசமாக இருந்து, இதோ இந்த நொடியில் எல்லாம் மறந்து போன நிலையில் கண்ணை இறுதியாக மூடினார்.
அதுவரை அந்த உயிர், உடம்பு, போனால் போதும் என்னும் மன நிலையில் இருந்தவர்கள், இவரின் இறுதி கண் மூடும் மறைவை கண்டு மனம் ஒரு நிமிடம் கலங்கினாலும், அப்பாடி..என்று மனதை உற்சாகப்படுத்தி கொண்டு மள மளவென காரியங்களை பார்க்க ஆரம்பித்தார்கள்
சற்குருவின் இலக்கிய உலகம் அவரை கண்டு கொள்ளாமல் போயிருந்தாலும் உறவுகள் நிறைய இருந்தும் இதுவரை அவரை கண்டு கொள்ளாமல் இருந்தது. காரணம் எங்கே அவரோ அவர் குடும்பத்தாரோ உதவி கேட்டு விடுவார்களோ என்னும் பயத்தில் வராமல் இருந்தார்கள். ஆனால் இப்பொழுதுதான் இவர்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டு விட்டார்களே..! பிறகென்ன? எல்லா உறவுகளும் இவரது மறைவுக்கு வந்து குவிந்தார்கள்.
உடல் எரிப்பு எல்லாம் முடிந்து, இரண்டு நாட்கள் ஓடியிருக்க, அதுவரை கண்டு கொள்ளாமல் விடப்பட்ட அந்த அறைக்குள் வந்த மகன், மகள், அம்மாவிடம் கேட்டார்கள், இனி என்னம்மா செய்யலாம் இந்த ரூமுல? அது பாட்டுக்கு கிடக்கட்டும், பழய சாமான்களை கொண்டு வந்து போட்டு வச்சுக்கலாம், மனைவி மகள்,மகனிடம் சொன்னாள்.முதல்ல அவர் இருந்தாரு, இப்ப பழைய சாமான் இருக்கட்டுமே, மனைவி சொன்னாள்.
அவர் மறைந்து இரண்டு நாட்கள் ஓடியிருந்தது, இலக்கிய எழுத்தாளர் சற்குருவின் படைப்புக்கள் அரசுடமையாக்கப்படுகிறது என்னும் அறிவிப்பு ஒன்று வெளியானது.
அவர்கள் குடும்பம் அவசர அவசரமாக அவரது போட்டோ ஏதாவது ஒன்று கிடைக்குமா என்று தேடினார்கள். மனைவி யோசித்து யோசித்து கடைசியில் அவர்களது கல்யாணத்தன்று மாலையுடன் நின்று எடுத்த பழைய போட்டோவை ஸ்டுடியோவில் கொடுத்து கழுவி அதை பெரியதாக படமாக போடப்பட்டு அவர்களது வீட்டின் முகப்பறையில் மேல் சுவற்றில் நடுவில் தொங்கவிடப்பட்டு இதில் இலக்கிய செல்வர் “சற்குரு” அவர்கள் வாழ்ந்த வீடு என்று பெருமை பொங்க சொல்லி கொண்டிருந்தார்கள் அவர்கள் குடும்பத்தார்.
சுற்றத்தார்களை பற்றி கேள்வியே வேண்டாம். அதை விட யாருமே அண்டாமல் இருந்த அவர் இருந்த அறை சுத்தப்படுத்தப்பட்டு, அவரது கண்ணாடி, மற்றும் உடமைகள் அடுக்கி வைக்கப்பட்டு, இது எங்கப்பா இருந்த அறை என்று வாரிசுகளாலும், இவரு எங்க மேல உசிரையே வச்சிருந்தாரு என்று மனைவியும், வாரிசுகளும் பத்திரிக்கை யாளர்களிடம் சொல்லி கொண்டிருந்தார்கள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (9-Aug-23, 3:32 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 110

மேலே