படைப்பாளிகள் வரவேண்டும்!

மூளைச் செல்கள் முடக்கி விடப்பட்டன
மின்னும் பாய்ந்தது மின்னல் வெடித்தது.
பேனாவின் ஒழுக்கில் வண்ணமாய்
எண்ணங்கள் வடிவெடுத்தது.
தேனாய்ப் பாய்ந்தொழுகும் சிந்தனை சிதறல்கள்
வீணாகப் போகாது விரல்கள் வடித்தன.
மானாக மாற்றான் மனங்களில் பாய்ந்து
தானாக உருவெடுத்து தன்வரிகளில் வரைபடமாயின.
ஊராக உறவாக உன்னத உரிமையாக
நாடாத பொருளில்லை, நவிலாத நயமில்லை,
தேடாத கருவில்லை, தெளியாத நிலையில்லை.
வாடாத பூக்களாய் படைப்பாளி வரிகள்
சிதையாத எண்ணங்களாய் நிறைவான திண்ணங்களாய்
வரையாது வாசகர் மனதில் வசந்தமாய் வீசவேண்டும்.
கறையாக கருத்துக்கள் களமேற வேண்டாம்.
முறையாக முத்திரைகள் பதிக்க வேண்டும்.
சிறையாக சிந்தனைகள் சிக்குண்டு போகவேண்டாம்.
கதியாகக் கனவுகள் கடையேற வேண்டும்.
திரையாக அச்சம் திறமானஅறிவைச் சிறைப்பிடிக்க வேண்டாம்.
கரைகாணா கவியார்வம் அலைமோத வேண்டும்.
விலைமாதர் மடிமீது சுகம் காணும் வீணராய்,
நிலையில்லாப் புகழை நினைத்திருக்க வேண்டாம்.
நிறைவாக நிஜமான நிதர்சனங்கள் நிழலாகத்
தரமான படையல்கள் மனங்களில் படிந்திருக்க
படைப்பாளிகள் பலப்பல பரவிவர வேண்டும்.

எழுதியவர் : (7-Jan-12, 3:33 am)
பார்வை : 204

மேலே