உயிரின் துளிர்
அழகான பயணங்கள்,
புரியாத பாதையில்...
முதன் முதலாக ஈர்க்கப்படுகிறேன்,
முகம் பார்த்து, பேசாமலே...
தொலைக்கவும் தயாராகினேன்,
மொழிதான் மனச்சாவி என்று தெரியாமலே....
ஊர்ப்பலகை அனைத்தும் படித்து ரசித்தேன்,
உனது பெயர் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்து..
தினமும் ஒருமுறையாவது பார்க்கிறேன்,
மௌனமாகவே போய்விடுகிறாய்...
நெருங்கி வர நினைக்கும்போதெல்லாம் -ஏனோ,
சுருங்கிய பின் விரிய மறுக்கிறது இதயம்...
படச்சுருளில் அகப்பட்ட பிம்பம் போலவே,
மடித்துக்கொண்டது மனது...
கள்ளத்தனமாய் கோபப்பட்ட உன் கண்களில்,
மெல்லியதாய் ஒரு மாற்றம்...
மறக்க முடியாத நாள்...
கெட்டியாக யாரோ அழுத்திப்பிடிக்கும் உணர்வு,
திக்கித்திணறி பெருமூச்சோடு பார்த்தேன்,
சட்டென்று திரும்பிக்கொண்டாய்...
கவனிக்கிறாய் என்று தெரியாமலே,
காலடி பாதங்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்..
மறக்க முடியாத நாள்...
பட்டுப்போன உயிர்,
துளிர் விடுகிறது...
ஆமாம்,
உன் பார்வை பட்டு,
போன உயிர் துளிர் விடுகிறது...
அதிசயம் தானே -எல்லோருக்கும்,
முதல் காதலின் முதல் பார்வை...