எழுத்து.காமில், கவிஞனுக்கும், வாசகனுக்குமான முக்கிய கருத்துப்பரிமாற்றம் (பகுதி - 2 )

முதலில், இங்கு கூடியுள்ள அனைத்து படைப்பாளிகளுக்கும், வாசகருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இக்கருத்தரங்கத்தை துவங்க காரணமாய் இருந்த திரு பரிதி முத்துராசன் மற்றும் திரு மு ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு கருத்தை தெரிவித்த என் தோழர்/தோழி -களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி, என் அறிவில் தோன்றிய சில கருத்துக்களையும் நான் இங்கு பகிர்கிறேன்.

புதுவை காயத்ரி அவர்கள் மூலம், ஆசான் ஈரோடு தமிழன்பனின் 'பயன் கருதா பணிகளை செய்பவனின் பாதங்களை நோக்கி பாராட்டே பாதையாகும்' - என்பதை, நான் அறிந்ததில் மகிழ்கிறேன். உடன் மரியாதைக்குரிய திரு தமிழன்பனுக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இருந்தும், ஆரம்பப்புள்ளியையும் அனைவரும் அறிவதில் நன்றே. மகாபாரதத்தில், போர் துவங்குவதற்கு முன்னரே, போரை விரும்பாத அர்ச்சுனன் காண்டிபத்தை கீழே வைத்துவிடுவான். பிறகு, கண்ணன் கீதாஉபதேசத்தை துவங்குவான்.
அங்கே, கர்மயோகம் பற்றிய விளக்கம் வெளிப்படும்;

""""""""""""
கண்ணன் விளக்குகிறான்,...

அர்ச்சுனா, கர்மபலனை பற்றிய யோசனையே உன் பாதையின் முட்டுக்கட்டை. பலன் என்ற விஷயமானது, மனிதனின் கழுத்தில் கட்டப்பட்ட பெரும் கல்லைப் போன்றது, அது தன் இச்சைகளிலிருந்து மேலெழும்ப அனுமதி தருவதே இல்லை. இதுதான் மனிதனை சமூகத்திலிருந்து அகற்றுகிறது. தனிப்பட்ட லாபம், தனிப்பட்ட நஷ்டம் என்ற புதைச்சேற்றில் தள்ளிவிடுகிறது.

சமூகம் உன்னிடம் இல்லை, நீ சமூகத்தில் உள்ளாய். ஆகையால், உலகின் நலனை உன் தலையாய கடமையாகக் கொள். எது உலகுக்கு நன்மை பயக்குமோ, அது உனக்கும் நன்மை பயக்கும்.

எவன் ஒருவன், கர்மபலனின் இச்சையிலிருந்து விடுபட்டவனோ அவனே ஞானி, புத்திமான், கர்மயோகி. அவனுக்கு அவன் கர்மமே, கர்ம பலனும் கூட. ஆகையால், அவன் ஒரு கர்மத்தை முடித்துவிட்ட பிறகு, கர்ம பலனுக்காக காத்திருப்பதில்லை. மாறாக, அடுத்த கர்மத்தை நோக்கிச் செல்கிறான். இம்மனிதன், கர்மம் செய்தாலும், பாவத்தால் சீண்டப்படுவதில்லை.
அவன் வாழ்க்கை, தாமாகவே சமூகத்துக்கு நன்மை பயக்கக்கூடியது.

"""""""""""""""""

இவ்விளக்கத்தை உள்ளடக்கிய பின்புதான், மதிப்பிற்குரிய திரு தமிழன்பன் கூறமுற்ப்பட்டிருக்க இயலும் என்பது என் மனக்கருத்து. அவரின் மனதை நான் அறியேன். தவறாக ஏதேனும் கூறியிருப்பின், மன்னிக்கவும்.

நானும், அகர்மத்தையும் (கர்மத்தை விட உயர்ந்தது) , அகர்த்தாவையும் (கர்த்தாவை விட உயர்ந்தவர்) இணைத்தவாறு, நமக்கு கொடுக்கப்பட்ட உடலுறுப்பை நாம் எவ்வாறு சரியாக பயன்படுத்த முடியும் என்பதை நான் படைத்த "ஐந்தாவது கண்" கவிதையில் கூறியிருப்பேன்.

"""""""""""
"ஐந்தாவது கண்"

புறக்கண் ணிரண்டும் பொய்யாகாக் காக்க
மனக்கண் மாயை மெய்யாகா வேண்டின்
தனக்கென் னழிக்கும் அறிவுக்கண் திறக்கப் பிறக்கும்
அகக்கண் திறந்தோரே "அகர்த்தா" !

குறிப்பு: மனிதனுள், கடவுளின் குணங்களைத் தேடுங்கள்...மற்றவரின் நலனுக்காக நாடுங்கள்.

""""""""""

இப்போது, மறுபடியும், கருத்துப்பரிமாற்றங்களுக்கு வருவோம்.

வாழ்க்கையின் சிறுபகுதியோ, பெரும்பகுதியோ எனக்குத் தெரியாது, ஆனால் இப்போது சொல்லவிருப்பது, ஒரு முக்கிய பகுதி,......

குதிரை ரேசில், ஓடும் குதிரைகளில், முதலாவதாக வரும் குதிரைதான், அனைத்து பாராட்டுக்கும்.

மற்ற குதிரைகள் பாவமென்றால், முதலாவதாக வந்த இந்தகுதிரை மிகவும் பாவம். ஏனெனில்,

1) முதலாவதாக வந்ததற்காக பணஓநாய்களுக்குத்தான் அனைத்துமே தவிர, இதற்க்கல்ல.

2) மறுபடியும், மறுபடியும், ஓடு, ஓடு, ஓடு........... பணஓநாய்களுக்காக ஓடு, ஓடு, ஓடு.............

(பாவம் இந்த ஐந்தறிவு மிருகம்,
ஆறாவது அறிவே இல்லாத,
அதுவும் குறிப்பிட்டு சொல்ல இயலாத
ஒரு இரண்டுகால் உயிரினத்திடம்,
மாட்டிக்கொண்டு முழிக்கிறது - சட்டமும்
உறங்காது உறங்கியதுபோல் நடிக்கிறது.....)

(குறிப்பு: பணஓநாய்=குறிப்பிட்டு சொல்ல இயலாத
ஒரு இரண்டுகால் உயிரினம். நான் தனிப்பட்டு, ஓநாய் மிருகத்தை இழிவுபடுத்தவில்லை என்பதை கூறிக்கொள்கிறேன்)

இவ்வாறே, குதிரை ரேஸ் போன்றே, இன்றைய நம் வாழ்வில்..................

குழந்தை பிறந்து,
நான்கு வருடங்கள்கூட முடிவடைந்திருக்காது;
Pre-KG School English Medium,
அன்னையை விட்டு விலகிவிடு
இப்போதே, விலகக் கற்றுக்கொள்
வரும்காலத்தில், படித்து, வளர்ந்து,
உடன்பிறப்பையும் வீட்டிலிருந்து விலக்கக் கற்றுக்கொள்
மணம் முடிந்ததும்,
பெற்றோரையும் விலக்கக் கற்றுக்கொள்
பணத்தை மட்டும் பற்றுகொள்

(மன்னிக்கவும்,.....
என் மனம், குழந்தை பற்றி ஆரம்பித்ததும்,
இன்றைய வாழ்வின் அழுத்தத்தால்,
குழந்தை பிறந்தும், மிகச்சில வருடங்களில், வாழ்க்கையை இழந்த பெற்றோர்களைத்தான், நான்
என் அகக்கண்ணில் காண்கிறேன். அந்த அளவுக்கா,
இந்த வாழ்க்கை ரேஸ், ரேஸ், ரேஸ்,.......
மதிப்பெண், மதிப்பெண், மதிப்பெண்,.......
முதலிடம், முதலிடம், முதலிடம்,,,.........
என் குழந்தை முதலிடம்,,,,என் குழந்தை முதலிடம்.........
கடைசியில் பார்த்தால்,
பெற்றோர்கள் மனநல காப்பகத்தில் புகலிடம்.)

குழந்தை ஒன்று பேச
அன்னை ஒன்று பேச
அன்பு குத்துச்சண்டை போட
ஆசையில் குழந்தையுனை பாட.....
வளர்ந்த பிறகு,
கருத்துச் சண்டைபோட
கஷ்டமென்றால்
அன்னையை கட்டிபிடித்து சோகராகம் பாட....

-இதுபோன்ற அன்புப்பரிமாற்றலா முக்கியம்,
இல்லவே இல்லை, எது முக்கியம் என்றால்,

குழந்தைக்கு,
மாநகரத்திலேயே முதன்மைப்பள்ளியில்,
Pre-KG - க்காக
மூன்றுவயதிருக்கும்போதே
முன்பணம் கொடுத்து பதிவுசெய்வது....
பதினைந்தாம் வயதிலேயே,
வெளிநாட்டு பட்டப்படிப்பிற்காக
முன்னதாகவே பணமுன்பதிவுசெய்து.....
பிள்ளையையும் இயந்திரம்போல் தயார்செய்து
பதினேழு, பதினெட்டு வயதில்
வெளிநாடு அனுப்பிவைப்பது.......
பிறகு வெளிநாட்டில்,
இயந்திரம்போல் வாழ்ந்தபிள்ளை
இயந்திரநாட்டிலேயே வாழநினைக்குது...

முட்டாள் தகப்பன்,
தான் சாதிக்காததைஎல்லாம்
தன் மகன்தலைமேல் ஏற்றிவைத்தான்
அதன்மேலே பணமூட்டையை தூக்கிவைத்தான்
இன்று,
இறந்த தகப்பன் பிணமூட்டையென,
இறந்த உடலுக்கு தீ கொடுக்காது
வெளிநாட்டிலுள்ள நட்புவட்டாரதுடன் Bar-க்குசென்று பீர் கொடுக்கிறான்.

மன்னிக்கவும்,,,, உண்மையாக சொல்கிறேன், நான் பலமுறை, உங்களுக்கு குழந்தைகளை (அனைத்தின் ஆரம்பம்) வைத்து மதிப்பெண் பற்றி விவரிக்க முற்படுகிறேன். ஆனால், இழப்பைத்தான் பலமுறை கண்டேன் (மேற்கூறிய பெற்றோரின் இழப்புகள், பிள்ளைகளின் இழப்புகள்). சிந்தனையில், கவிதை சிந்திக்கொண்டே தொடர்கிறது.

என்னடா இவன், குழந்தைதான் அனைத்தின் ஆரம்பம் என்று சொல்கிறானே என்று நினைக்கலாம். இதுதான் யதார்த்தமான உண்மை, உதாரணமாக, Dr. அப்துல் கலாம் அவர்கள் ஒரு குழந்தைகள் பள்ளிக்கு சென்றிருந்தார், ஒரு குழந்தை அவரிடம் கேட்டது, லஞ்சத்தை தடுக்க ஏன் முடியவில்லை, எவ்வாறு தடுப்பது? அப்துல் கலாம் விடையளித்தார், முதலில் ஒவ்வொரு குழந்தையும் அவரவர் பெற்றோரிடம் சென்று "இன்றுமுதல் நான் இது வேண்டும், அது வேண்டும் என தொந்தரவு கொடுக்கமாட்டேன் என உறுதிமொழி கொடுப்பீர்களானால்" லஞ்சம், கீழ் முதல் மேல்மட்ட வகுப்புவரை உள்ள மக்களிடமிருந்து குறைந்துக்கொண்டே வரும்.

சரி. மேலும் ஒரு முறை கருத்தை பகிர்வதற்கு முயற்சிக்கிறேன்.

குழந்தையின் முதுகில் மூட்டை வைக்கிறான்
அதிகமதிப்பெண்கள் எடுஎடுயென
சாவிதொடுத்து ஓடவைக்கிறான்
இடையில் மூச்சுவாங்க நின்றால்,
ஓடுயென முதுகில் ஒருபோடு வைக்கிறான்
அதுமட்டுமில்லாமல், இடையிடையே
வாழ்க்கை ஒரு வட்டம்,
வாழ்க்கை ஒரு சட்டம் - என பாடி பூட்டிவைக்கிறான்
வளர்ந்தபிறகும்,
மனனம்செய்த மழலைபோல்
மீண்டும்,
வாழ்க்கை ஒரு வட்டம்,
வாழ்க்கை ஒரு சட்டம் யென
தனக்குத்தானே சாவி கொடுத்துக்(கொல்)கிறது.....

(எங்கு சென்று சொல்வது, தற்கொலை என்பதை அறியாது தற்கொலை செய்துக்கொள்கிறான்)

போதுமடா சாமி.......
வட்டத்திலிருந்தே வட்டமிடுங்கள்
சட்டத்திலிருந்தே சட்டமிடுங்கள்
வாழ்க்கையையும் அவ்வாறே முடித்துவிடுங்கள்
- இதுதான் வாழ்க்கை என்றால்,
என்னைப்பொருத்தவரையில், அவன் உயிர் இருந்தும், வாழவில்லை என்பேன்.

முடிவுரைக்கு அருகில் இருப்பதால்,
சொல்ல வந்த சில கருத்துக்களையும் சொல்லிவிடுகிறேன்.

""""""""""""""""""
பாராட்டைப் பற்றி,

1. கண்ணன் கர்மயோகத்திலே கூறிவிட்டான், அதையே, மதிப்பிற்குரிய திரு தமிழன்பனும் கூறிவிட்டார்.

2. நான், பகுதி - 1 ல் கூறியவாறு, எழுத்துத் தளத்தில், தமிழை வளர்க்க பெரிதும் பாடுபடும் படைப்பாளியை சரியாக தேடிப்பிடிக்க, ஒரு சூத்திரம் உண்டு என்றேன்.

தனிப்பட்ட ஒவ்வொருவரின் கருத்துப்பரிமாற்ற ஆர்வத்தை கூர்ந்து கவனியுங்கள்.

"பார்வை" - படைப்பாளியின் கவிதையை பார்வையிட்டவர்கள் எத்தனை பேர்.

"கருத்து" - படைப்பாளி எத்தனை பேருக்கு, படைக்கும் ஆர்வத்தை அதிகரிக்க/ஊக்குவிக்க மற்றும் தமிழை வளர்க்க கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழை வளர்க்க, நல்ல கருத்துப்பரிமாற்றம் மேற்கொண்ட படைப்பாளி = ratio of ("கருத்து" : "பார்வை")

""""""""""""""""""""""'

நான் இக்கருத்தரங்கத்தில், முயற்சிப்பது இதுதான்,

நாளை ஒரு நல்ல படைப்பாளி, இத்தளத்தை விட்டு பிரிகையில்,

அத்தளத்தின், வளரும், வளர்ந்துவரும் இளைய கவிஞர்கள், பிரிந்த அந்த படைப்பாளியை நினைத்து எவ்வாறு கூறவேண்டுமெனில்,

1)
சமுதாயத்திற்குத் தேவையான பல நல்ல கவிதைகளை படைத்தான், அப்படைப்பாளி. அதையும், வாசகருடனான பல நல்ல கருத்துப்பரிமாற்றலால், கவிதையின் கருத்தை எளிமைபடுத்தி, மேலும் உலகிலுள்ள பலருக்கும் சென்றடையும் வண்ணம் (உள்ளடக்கியது :- நாளை நாம் இல்லாவிட்டாலும், யாரோ ஒரு இளைஞர் மொழிபெயர்த்தலை துவக்கினால், அவருக்கும் எளிதில் கவிதையின் கருத்து புரியும்வண்ணம்) தன் கவிப்பணியை செம்மையாக செய்துவைத்து சென்றான் (கர்மபலன் நாடாது), அப்படைப்பாளி.

2)
மேற்க்கூறியதையும்விட, அப்படைப்பாளி செய்த மிக முக்கிய கவிப்பணி யாதெனில், தன் தாய்மொழியை வளர்க்க, இரவுபகல் பாராமல்,
வளரும், வளர்ந்துவரும் இளைய கவிஞர்களுக்கு முதுகெலும்பாய் இருந்து, அவர்களின் கவித்திறனை வளர்க்க, தன் கருத்தை பரிமாற்றல் செய்தும், வளரும் இளைய சிஷ்யர்களுடன் ஒரு ஆரோக்கியமான கருத்துயுத்தம் செய்தும், நற்சமுதாய நோக்கமுள்ள கவிதைகளை படைக்கும் சிஷ்யர்களை தமிழுக்கு கொடுத்து, தமிழ்க்கவிதைகளுக்கு தலைமகனாகத் திகழ்ந்தான், அப்படைப்பாளி.


குறிப்பு:
1) ஒரு நல்ல காரியத்திற்காக அண்ணல் காந்தியடிகள் சொன்னது,
"மாற்றத்திற்காக நீ காத்திருப்பதைவிட,
நீயேன் அந்த மாற்றமாக இருக்கக்கூடாது"
ஆதலால், "Be the change you wish to see in this world".

2) தற்ச்செயலாக இப்படைப்பு ஏறக்குறைய இத்தளத்தில், என் 100-வது படைப்பாக அமைந்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
உடன், இத்தளத்தில் உள்ள என் மரியாதைக்குரிய அனைத்து தோழர் / தோழி -களுக்கும், என் குடும்பத்தாருக்கும், என் ஆசான்களுக்கும், என் நண்பர்களுக்கும் - தொடர்ந்து பக்கபலமாய் இருந்தமைக்கு என் நன்றிகள்.

ஆனால், நற்கருத்து உரையாடலை, அவரவர் உள்ளக்கருத்து கொண்டு நற்க்கருத்துயுத்தம் செய்து, சமுதாயத்திற்கு நன்மைகள் தேடுங்கள். அதுவே, உங்களுக்கும், எனக்கும் நன்மை.

எழுதியவர் : A பிரேம் குமார் (16-May-12, 4:42 am)
பார்வை : 375

சிறந்த கட்டுரைகள்

மேலே