காலம் கரைகிறது

தாயின் மடியில் தலைவைத்து
தாலாட்டுச் சுகம் கண்டு
சேயாய் உறங்கிய காலமெல்லாம்
கரைந்து தான் போனதின்று
தேனாகப் பேசி தேனீக்களாய்
தெருவெல்லாம் மகிழ்ந்து இன்புற்ற
காலமெல்லாம் திசைமாறிப் போனதின்று
தொடர்ந்த வந்த தொடரூந்தில்
விடைபெற்ற பெட்டி போல்
கடந்து வந்த பாதையில்
கழன்ற உறவுகள் ஆயிரம்
நிலைபெற்ற நினைவுகள் தினம் தினம்
நிலையாக மனதில் அலைமோதும் - காலமோ
சில்பூட்டிச் சிறப்பாய்ப் பறக்கிறது
நீரினுள் உப்புப் போல்
கரைகிறது கண் முன்னே.
சிறையிருந்த பிரமன் நினைத்தாலும்
முறையாய் யாகம் செய்தாலும்
கரையும் காலம் நிலைப்பதில்லை
விரையும் ஆயுள் குறைவதில்லை
நிலையில்லா உலக வாழ்வில் - மக்கள்
நினைவில் சிலையாக வாழ
தரமான செயல் செய்தேயாக வேண்டும்.

எழுதியவர் : kowsy (20-May-12, 12:07 pm)
Tanglish : kaalam karaikirathu
பார்வை : 157

மேலே