எங்களின் தீபாவளி.

அந்தக் காலங்கள் ஒரு இனிமைதான். ரொம்ப சுதந்திரமானது. இயற்கையானது. மனதில் கவலையில்லாததும்.
1970 களில் பள்ளிப்படிப்புக் காலங்கள். தீபாவளியின் முந்தய தினம் எங்கள் கிராமத்திற்கு பயணமாவோம். மொத்தகுடும்பமும் அன்றிரவே ஆஜராகிவிடும். ஒவ்வொரு வயது தொகுதிகளும் தத்தம் வயதினருடனும் சேர்ந்துகொண்டு தங்களின் இன்பத்தை தொந்தரவின்றி அனுபவிப்போம். என்வயதொத்த இளசுகள் படையில் நாங்கள் நால்வர். ஊர் சென்றடைந்ததும் நால்வரும் இணைந்தே செல்வோம் எங்கு சென்றாலும். இது எழுதப்படாத தீர்ப்பு.
முதலில் மாமாவைக் காணத்தான் செல்வோம். மாமா என்றால் சின்னத்தை மாமா. எங்களைக்கண்டவுடன் அவர், வாங்கடா வெடிவாங்கப் போவோம் என்று எங்களை அழைத்துக்கொண்டு கடைக்குக் கூட்டிச்செல்வார். கடையில் வெளியே ஒரு சேரைப்போட்டுக்கொண்டு மற்றவர்களுன் அரட்டையடிப்பார். எங்கள் பட்டாளம், எந்த நேரத்திற்கு எந்த வெடி போடுவதென்று தீர்மானித்து முடிவுசெய்து வெடிகளை சேர்க்கத் துவங்குவோம்.
முழு இரவுக்கும் ஒலைவேடியும் துப்பாக்கி வெடியும்தான். அதன்பின் அதிகாலை 5000 சரம், மற்றும் வகைவகையான சரங்கள். மதியவேளையில் அணுகுண்டு, லட்சுமிவெடி வகையறாக்கள். மாலையில் வெளிச்சம் தரும் ராக்கெட், புஸ்வானம், மத்தாப்புகள் எல்லாம். ஒரு முழுநாள் மட்டுமே இந்தக் கொண்டாட்டம். தேவையான வெடிகளனைத்தையும் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்ததும், அனைவருக்கும் அவர்களின் தகுதி வயதுக்கேற்ப பிரித்துத் தரப்படும். மொத்தம் வெடிவெடிக்கும் வயதில் 16 வீரர்களும் வீராங்கனைகளும் உண்டு. ஒரு சத்தமும் இன்றி பிரித்து அவரவர்களுக்கு ஒரு மஞ்சள் பெருங்காயப் பையில் போட்டுத் தரப்படும். அவர்கள் அதைப் பாதுகாத்து விரும்பியநேரம் போட்டுக்கொள்ளலாம்.
வெடிகள் கைக்குவரும்வேளை இரவு 10 மணி. பெண்கள் பலகாரங்கள் செய்யத் துவங்குவார்கள். நாங்கள் ஒலைவேடியில் துவங்குவோம். அதிரசம், முறுக்கு, சீவல், சீடை, முந்தரிக்கொத்து, அல்வா, அது கக்கும் நெய்யில் மைசூர்பாகு, வடைவகைகள், ரவாலட்டு, ரவை பணியாரம், இட்டிலி,பொங்கல் சாம்பார் அத்தனையையும் இரவு முழுவது விழித்து செய்து முடிப்பார்கள். அவர்கள் முடிக்க, நாங்கள் ஓலைவெடிகளை வெடித்துமுடிக்க அதிகாலை நாலை மணி காட்டிநிற்கும்.
எல்லோரும் குளிக்கத் துவங்குவர். எங்கள் இளவட்ட சங்கம் கிணற்றிலிருந்து எல்லோருக்கும் நீர் இரைத்துக் கொடுக்கும் வேலையைச் செவ்வனே செய்துமுடித்து குளித்து முடிக்கும்பொழுது காலை ஆறைத் தொட்டிருக்கும் மணி. பெருசுகள் முதல் அனைவரும் சேர்ந்து சாமி கும்பிட்டு, அய்யாப்பா எல்லோருக்கும் புதுதுணியினை வழங்க தீபாவளி துவங்கும்.
முதலில் 5000 வாலாவில் துவங்கி அது ஒருபுறம் களைகட்டி ஓடிக்கொண்டிருக்கும். மொத்தக் குடும்பமும் வெடிவெடிப்பதினைக் கண்டு ஆரவாரம் செய்து மகிழும். பின் விருந்து. எதை எடுப்பது எதை விடுப்பது என்பது ஒரு குழப்ப நிலையினை உருவாக்கிவிடும், அளவுக்கு உணவு வகைகள். எல்லாம் ருசியானவை. தேர்ந்த பெண்களின் கைப்பக்குவம். வாழ்வின் பாக்கியமான திகட்டிடும் நிமிடங்கள். உணவு முடிந்ததும் அரட்டைகளும் நையாண்டிப் பேச்சுகளும், கேலியும் கிண்டலுமாக நேரம் ஓடிடிடத் துவங்கும். ஒரு பிரிவு அன்று ரிலீசாகும் புதுப்படம் பார்க்கக் கிளம்பிவிடும். அப்படியே இரவின் விழிப்பு, உணவின் இனிமை, நண்பர்களின் அன்பு எல்லாமாய் சேர்ந்து நம்மை ஒரு கிறக்கத்தில் கொண்டு நிறுத்திநிற்கும். அதற்காக தூங்கிவிடவும் முடிவதில்லை. மாலையில் எல்லா வெடிகளும் தீர்ந்து, வெடிக்காத வெடிகளைஎல்லாம் தெருவில் பொறுக்கியெடுத்து சொக்கப்பானை கொளுத்தும்வரை எல்லாமும் சரியாகவே சென்றுகொண்டிருக்கும்.
ஒவ்வொரு வருடமும் சொக்கப்பானை கொளுத்தும் சமயம் யாருக்காயினும் ஒரு தீக்காயம் ஏற்படாமல் போகாது. முக்கியமாக என் பெரிய மாப்பிள்ளைக்கு ஏதாகிலும் ஒரு சிறிய காயமேனும் ஏற்படாமல் தீபாவளி முடிந்துவிடுவதில்லை. அவனுக்கும் தீபாவளிக்கும் அப்படியொரு இன்பப் பிணைப்பு.
பின்னர் சோகத்துடன் ஒருவரையொருவர் பேசிக்கொள்ளாமல், கணத்த மனதுடன் பிரிந்து ஊருக்குப் புறப்படுவோம். இதுதான் நாங்கள் வாழ்ந்த இன்பத் தீபாவளி.

எழுதியவர் : தீ (11-Nov-12, 10:38 am)
பார்வை : 559

மேலே