எவரும் நிச்சயம் வாசித்து மகிழ வேண்டிய படைப்பு-45
தோழமைகளே...
எவரும் நிச்சயம் வாசித்து மகிழ வேண்டிய படைப்புகள் வரிசையில் 45 -ஆவது படைப்பு...
தோழர்கள் எவரும் பரிந்துரை செய்யலாம்..... இப்படித்தான் நாம் நமது பரிந்துரைகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் அல்லவா..
. வாசித்து தோழர் ரமேஷாலாத்திற்கு வாழ்த்துகள் கூறலாம்..
என் கவிதை...
எனது கவிதையை....
எப்போதும் கவிதை இல்லை
என்று சொல்லிவிடுகிறாய் நீ.
நீ விரும்பும் அழகை அவை...
எப்போதும் பேசுவதில்லை.
நீ எப்போதும்...
பெருமை பேசும்
உன் இளமையின் சுவாசமாய் இருக்கும்
காதலையும்.
எனது கவிதைகள்...
எப்போதும்...அழுக்காய் இருக்கும்
மனிதர்களைப் பாடுகின்றன.
மனிதர்களின்...
வாதைகளை...
வாழ்வின் ஏமாற்றங்களை...
நிராசைகளை...பெரும் கனவுகளை...
எழுதிச் செல்லும்...
எனது கவிதைகளை...
உனக்கு ஒரு போதும் பிடிப்பதில்லை.
எனது கவிதைகள்...
சிறகுகள் வெட்டப்பட்ட
கூண்டுக் கிளிகளைச் சொன்னால்
உனக்குப் பிடிப்பதில்லை.
பறப்பதற்காகவும்...
புன்னகைப்பதற்குமான...
கவிதையின் கழுத்தை...
நான் திருகிக் கொன்றுவிட்டதாய்...
விசனப்படுகிறாய்.
காமமும்...காதலும்...
தாண்டிச் சிதையும்
மனிதர்கள் பற்றிய...
அறிமுகங்களோ...
கேட்கும் அவகாசங்களோ...
உனக்கு இல்லாமல் இருக்கலாம்.
சிரித்துத் திரியும் உன் வாழ்வினூடே...
அருவெறுக்கும் .. சிரங்குகள் என
இம்மனிதர்களை நீ ஒதுக்கிவிடலாம்...
என்றாலும்....
வாழ்வின் விளிம்பைச் சொல்லாத...
எந்த மொழியின்..இலக்கியம்...
கவிதையாகிவிடும்?..-.என்னும் ..
என் கேள்விக்கு மட்டும்..
எந்த மொழியிலும் பதிலிருப்பதில்லை
உன்னிடம்.
கூட...!!!