பார்வையற்றவனும் ஓவியமும்

ஒரு நாள் பரிசுபெற்ற
ஓவியமொன்று
பார்வையற்ற ஒருவனைக் காண
அவனில்லம் தேடி வந்தது
குனிந்த படி
ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டிருந்த
அவன்
கதவோரம் நின்றுகொண்டிருந்த
தன்னை அடையாளம்
காண முடியாததால்
தொண்டையை செருமியது ...
செருமிய ஓவியத்தின்
குரல் கேட்டு
விசாரிக்கலானான் ...
ஓவியம் சொல்லிற்று ..

வண்ணங்களின் கலவையில்
உதிரம் பெற்று
தூரிகையின் ஸ்பரிசத்தால்
உருவம் பெற்று
விரல்களின் விளையாடலால்
உயிர் பெற்று
கண்களால் மோட்சம் பெற்று
சாகாவரம் பெற்ற
சுவர்கப்பொன்னோவியம் என்றது ...

பார்வையற்றவன் சொன்னான்
விழியுணர முடியா
செவிப் பிரதேசத்தின்
ஒலிப் பிரஜைநான்
என் ஆலாபனைகள்
காற்றில் விரல் கோதும் போது
ஆத்மாவின்
எல்லாத் துளைகளிலும்
மயிற்பீலி மதுரமிசைக்கும்
புவிபுலர
புல்லாங்குழலில் நான் நுழைந்தால்
விழி மயிலிரண்டும்
தானாய் நடனமாடுமென்றான் ....

உடனே ஓவியமுருகி
இசையாய் ஓடி
ஆர்மோனியத்திற்குள் பாய்ந்தது
வண்ணங்களனைத்தும்
ஸ்ருதியை தந்திகளின்
கம்பிகளில் கலந்தது
செவியிரண்டும் விழிகளாய்
திறந்திட
பார்வையற்றவன் ஓவியத்தை
ருசித்துப் பருகியபடி
ஆர்மோனியத்தின் தாளக்கட்டைகளை
தூரிகையாக்கி
தனதிசையாலொரு
புதிய ஓவியத்தை
ஒலிகளால் வரையத்தொடங்கினான்...
அது ஒளியோவியமாய்
ஒரு நிலவென மாறி
ஓடும் நதிநீரினில்
தனது ஒளியினை கரைத்தது ...

ஓவியம் பார்வையற்றவனின்
இசைமேவும் விரல்களைபிடித்து
நதி நீரில் அமிழ்த்தியது
அவன் நீரின் சில்லிடலில்
நிலவோவியத்தின் வண்ணமுணர
நிலவு பெருமிதத்தின்
வெட்கத்தினால்
மேகங்களுக்குள் ஒளிந்தோடிட
பார்வையற்றவன் ஓவியனானான்
ஓவியம் இசையாகியது .

எழுதியவர் : பாலா (5-Mar-16, 5:51 pm)
பார்வை : 165

மேலே