மனதோர மழைச்சாரல்

மனதோர மழைச்சாரல்...

அடை மழை என் மேனியை நனைக்க
உன் விரல் கோர்த்து நானும் நடக்க
முதல் முறை என் நெஞ்சினில் வான்மழை
தூவிட கண்டேன்...
உன் அருகில் எனை மறந்தே நானும் நின்றேன்...

உன் முகத்தில் வழிந்திடும் நீரை நீயும் துடைக்கையிலே
என் மனமும் வழுக்கி விழுந்ததடா உன்னிடத்தில்...
உன் மீசையோர துளிகளை சுவைத்திடவே
நாணம் துறந்து துடித்ததடா என் இதழும்....

இருள் சூழ்ந்த பாதையில் நானும் நீயும் தனித்திருக்க
ஒளி தரும் சூரியனாய் என் விழிகளுக்குள் நீயும்
மலர்ந்தாயடா...
உன் ஒவ்வொரு உரசல்களும் குளிர் தீர்க்கும்
அனலாய் என் தாபங்களை அள்ளியே அணைத்ததடா...

தூறல்கள் நனைந்த சாலையில் உன்னுடன்
நடந்திடும் பயணம் முடிவில்லாத பயணமாய்
தொடர்ந்திடவே மனமும் ஏங்கியே தவிக்குதடா...
இப்படியே இந்த நொடி உறைந்தாலும் உனை
அணைத்தவாறே உனக்குள் நானும் கலப்பேனடா....

எழுதியவர் : அன்புடன் சகி (10-Oct-16, 6:39 pm)
பார்வை : 690

மேலே