நாத்து...!

அது ஒரு மத்தியான குளக்கரை..நானும் சில பட்சிகளும் காற்றில் நடனமாடும் குளத்தினை ரசித்தபடி இருந்தோம். இந்த மதிய வெயிலின் கடுமைக்கு எப்போதும் சவால் விடுவது இந்த குளக்கரை அதற்கு காரணம் குளத்தின் மீது பற்றிப்பரவி படர்ந்திருக்கும் அரசமரம். மாடுகள் எல்லாம் கண்ணுக்கு எட்டிய தொலைவில்தான் மேய்ந்து கொண்டிருக்கின்றன...சற்று முன் தான் குளக்கரைக்கு வந்தேன்.....

என் கல்லூரி வார இறுதிகளில் மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்ச்சலுக்கு வருவது என் வழக்கம். வாரம் முழுவதும் ஓடி ஆடி மனித சுவாசங்களை மேல் வாங்கி...இரைச்சலில் அமிழ்ந்து, கோபத்தில் கரிந்து, பொறாமையில் வெந்து ரொம்பவே தளர்ச்சியான ஒரு நிலைக்கு உற்சாகம் கொடுக்கும் என் மாடு மேய்த்தல்.

(மனசுக்குள்ள இருக்கும் போது ஒரு நடை ஆனா... பேச ஆரம்பிச்சா நம்ம சொந்த நடை வந்துடுது..சரி வாங்க பொடி நடையா போய்கிட்டே பேசலாம்)

ம்ம்ம்ம்ம்ம் அங்க பாருங்க..... அட அங்க இல்ல.. அதோ..............அங்க.. ஆமாம்.. அவளேதான்...

அந்த ஓரமா நின்னுகிட்டு கிலுவை இலைய இழுக்குறா பாத்தீகளா..செவலை கன்னு அவ பேருதான் கோமதி!

என்ன பெத்தா....நான்னா அவளுக்கு உசுரு அவன்னா எனக்கு உசுரு....கிட்ட போனாலே புஸ்ஸு புஸ்ஸூனு மூச்சு விட்டுகிட்டு முப்பது தடவை நாக்க வெளில நீட்டி நீட்டி என் கைய கால நக்கிகிட்டே இருப்பா....

நீங்க வேணா வந்து என்னைய வஞ்சு பாருங்களே.... இல்லாட்டி தள்ளி கிள்ளி பாருங்களே....உங்கள வெரட்டி வெரட்டி குத்த வருவா ஹா.. ஹா..ஹா..! பொன்னரசி அவ...முதுக தடவி..கழுத்த கட்டி கன்னத்தோடு கன்னத்த வச்சிக்கிற போது மிண்டாம நிப்பா...அம்புட்டு ஆசை எம்மேல அவளுக்கு...

அந்த வரப்பு தாண்டி எகத்தாளமா தலைய ஆட்டி…ஆட்டி திமிரா காட்டாமனுக்க செடிகிட்ட போயி திங்கிற மாதிரிபாவலா பண்ணிட்டு திங்காம...இங்கிட்டு பாத்து பல்ல காட்டி கத்துறான் பாருங்க...அவன் தான் வெள்ளையன்.. ரொம்ப மொரடன்.. .எங்க நீங்க புடிச்சுபுடிவியலாக்கும்....ஹீக்கும்... முடியாதுப்பே..நம்மளயே வெரட்டி வெரட்டி குத்த வருவான்ல....ஆன வெகுளிப்பயவுள்ள....

வெள்ளையனும் செவத்தையும் சோடி போட்டுத்தேன் நம்ம வயக்காட உழுவாய்ங்க... நுகத்தடிய மாட்டிவிட்டு வயக்காட்ல பத்தி விட்டாவுல்ல இருக்கு ..அசராம உழுவாய்ங்க.. !

எங்க அப்பு கஞ்சி குடிக்கிற செத்த வடத்துக்கு நானும் உழுதிருக்கேன்...! ஆத்தாடியோவ்.. ஒரு சேதி சொல்றே கேட்டுக்குறுங்க.. நீங்க எந் த ஊர்ல வேணா இருங்க என்ன தேசத்துல வேணா இருங்க.. ஒரு தமிழனாப் பொறந்து இருந்தியன்னா ஒரு தடவயாச்சும் வந்து வயல்ல உழுது பாருங்கப்பு....

சோறூ சோறுன்னு சோத்த திங்கிற பயலுக நாம....சோத்த வெளச்சு வெளச்சு கொட்டி கொட்டிக் கொடுக்குற ஒரு வெவசாயியோட பொழப்பு என்னனு சத்தியமா தெரிஞ்சுகிடணும் அல்லாரும்...! வெறுங்காலோட அந்த சகதி மண்ணுல காலவச்சி இறங்கி நிக்கிம்போது சில்லீர்னு உடம்புக்குள்ள சொகமா ஒரு ஏத்தம் ஏறும் பாருங்க...

ஆத்தத்தோ....பொறப்பு இன்னிக்கி நிறவேறிப் போச்சுடா சாமின்னு கத்தத் தோணும்..! எனக்கு தோணும் உங்களுக்கு தோணுமான்னு தெரியல...ஆனா தோணும்னுதான் எனக்கு படுது...!

மண்ணுல இருந்துதேன் மனிசங்க வந்தாய்கன்னு சொல்லுவாக...எப்படி பாத்தாலும் இந்த மண்ணுதேன் இந்த பூமிதேன் நம்மல பெத்தாரு.....!!! அட வயக்காடு கூட நீங்க வரவேணாம் ராசா செத்தவடம் காலுல செருப்பு இல்லாம பூமில நடந்தாவது பாத்துருங்க...அம்புட்டுத்தேன்...!

சலக்கு புலக்குனு சகதில நடக்குறதே செரமமா இருக்கும்...ஒரு கால ஊண்டிப்புட்டியன்னா மறுகால எடுக்குறது செரமம்...உழுவுற கொலு வேற மண்ணுல நல்லா பதியுற மாதிரி நுகத்தடிய அழுத்திப் பிடிக்கணும்..அப்படியே நம்ம பயலுகளயும் கொஞ்சம் தட்டிக் கொடுத்து வெரட்டனும்...!

ஆழமா உழுதாதேன் அப்புறமா வெதை வெதைக்கிறப்பா நல்ல ஆழத்துல போய் வேர் பிடிக்கும்..ம்ம்ம் அதுக்கப்புறம் களை எடுக்கணும், நாத்து நடணும், உரம் போடணும், தண்ணிபாச்சணும் மழை பெய்யணும்...ம்ம்ம்ம் வெவசாயம் வெவசாயம்னு பேசிறுவாக எல்லாரும்... ஆனா ஒரு வெவசாயியோட பாடு.... நாஞ்சொல்லமாட்டேன் சாமி....

அட வெள்ளையனையும் செவலையும் பத்தி சொல்ல வந்துபுட்டு எங்கயோ போய்ட்டேனே...நான்...! அத விட்டுத்தள்ளுங்க... சரி… சரி அங்கன நிக்கிற பத்து பதினைஞ்சு பயவுள்ளயும் அந்த 4 வெள்ளாடும் நம்மவுட்டுதேன்....

என்னத்த சொல்லுங்க...ஆடி ஓடி அலையுற வாழ்க்கையில் காசு பணம் சந்தோசம் எல்லாம் கிடைக்கலாம் ஆன நிம்மதி கிடைக்குமாப்பு...? சந்தேகம்தேன்...கொள்ளைப் பேரு இப்ப டவுனுக்கு போறாக... வேல பாக்க.. ஆனா எங்கள போல கிராமத்தாய்ங்க என்ன செய்றது...! விட்டுப்புட்டு நம்மூரு சனத்துல பாதியும் டவுனுக்கு போயிருச்சு... அது வேற கதை...

இருந்தாலும் பச்சப் புள்ளைய மாதிரி கிடக்குற இந்த நெலத்தையெல்லாம் தரிசா போட்டுபுட்டு போறதுக்கு எப்டிப்பு மனசு வருது...! பசிதேன்.. பஞ்சம்தேன்... மழையும் சரியா பெய்யறது இல்லா...மழை பெய்யாதுல்லப்பு.......எப்டி பெய்யும்.... ஆயிரம் கோடி.. ரெண்டாயிரம் கோடின்னு ஊழல் பண்றாக ஊருக்குள்ள அப்புறம் எப்படி மழை பெய்யும்...?

அறிவியல் விஞ்ஞானம்னு என்ன என்னவோ பேசுறாக....ஆனா கிராமத்துக்கும் இந்த வயித்துப்பாட்டுக்கும் மொறயா ஒண்ணும் செய்யிறது கிடயாது....! படிச்ச பக்கிகளுக்கு இது பத்தி சொல்லிகுடுக்குறது இல்ல..ஏப்பு விவசாயம் பாக்குறது கேவலமா....?

நானும் காலேஷ்லதான் படிக்கிறேன்... மூணாவது வருசம் பி.காம்.....படிச்சுப்புட்டு விவசாயம்தான் பாக்க போறேன்....! அப்போ ஏன் படிச்சேன்னு கேக்குறியளா...ஏப்பு படிப்பு வேலை பாக்க மட்டுமில்லப்பு...அது அறிவு வளக்கவும்தேன்...

ஆத்தாடி பேசிகிட்டே இருந்திட்டேனே....பொழுது சாஞ்சி போச்சு....மாட்ட பத்திகிட்டு போவணும். ஆமா நீங்க டவுனுல இருந்து வந்திருக்கியலா.... ஹோப் யூ ஹேவ் ப்ளசண்ட் ஸ்டே அட் அவர் வில்லேஜ்.......இஃப் டைம் பர்மிட்ஸ்....ப்ளீஸ் டூ நாட் ஹெசிட்டேட் டு கம் அவர் ஹவுஸ்......பை த வே......

என் பேரு மாரிமுத்து... சரீங்களா...என்ன இங்கிலிபீசுன்னு பாத்தீங்களா சும்மாதேன்... தெரிஞ்சு வச்சுகிறது எப்பவும் உதவுமுங்களே.... நாம படிச்சது எல்லாம் மெட்ரிகுலேசன் ஸ்கூலுதேன்...பக்கத்து டவுன்ல…..!

ஏய்....செவல.....ஹேய்....ஹேய்..... ட்ரியோ...ட்ரியோ...ட்ரியோ....ஏய்... இங்குட்டு வாங்க எல்லாம் ...பொழுதோடிப் போச்சு வீட்டுக்கு போகலாம்...!

ஏய் கோமதி ம்ம்ம்ம்ம்ம்ம் ப்ப்ப்பூப்ப்ப்ப்ப்ப்ப்பு…………..

வாங்க வாங்க....! எல்லாத்தையும் ஒதுக்கிட்டேங்க.. நான் கிளம்புறேன்....சமயம் கிடச்சா வீட்டுப்பக்கம் வாங்க.....தெக்கிதெரு....அய்யாவு வீடு எதுன்னு கேட்டா ஊரு சனமே சொல்லும்....ஹா...ஹா..ஹா..

எழுதியவர் : Dheva.S (13-Mar-13, 8:37 pm)
சேர்த்தது : Dheva.S
பார்வை : 179

மேலே