இது நீயாயிருக்கக் கூடாது..!..பொள்ளாச்சி அபி

தலையில் மலம்சுமக்கும்
மனிதரைக் கண்டு-அவர்
தலைவிதியென ஒதுங்கினாய்..!

உனது ஊரில் நிகழ்ந்த
திருட்டும்,கொள்ளையும்
உன்னைப் பாதிக்கவேயில்லை..!

பக்கத்து வீடு..,
தீப்பற்றிக் கொண்டபோதும்..
நீ பதறவேயில்லை..!

உனது வாசலில்
கொலை நடந்தபோதும்
உனது கண்கள் மூடிக்கொண்டன.!

கற்பழிப்பு செய்திகளென்னவோ
பத்தோடு பதினொன்றாய் உனக்கு
மாறிப்போனது..!

வீதியில் நடந்த
போராட்டக்காரர்களின் குரல்
உனக்கு விஷமாய் இருந்தது..!

உயிரிழக்கத் தயாரான மாணவர்களின்
உண்ணாவிரதங்கள்
உனக்கு கேலியாய்ப் போனது..!

சகஉயிரின் குலையறுத்து
சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்தும்..
சண்டாளர்களை நீ கண்டிக்கவில்லை..!

என்றேனும் ஒருநாள்
உனக்கான போராட்டங்கள்
நடைபெறவும் தேவையிருக்கும்போது...,

யாருக்காகவும் உன்னை நீ
மாற்றிக் கொள்ளவில்லை.
உனக்கு மிக நல்லதுதான்.!
ஆனால்..,
வீட்டின் மூலையில்.,
மூளைக்குள் முடங்கிப்போய்
என்னடா நீ எழுதுகிறாய்..
சகிக்கமுடியா நாற்றம் எடுக்க..?
------------

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (15-Mar-13, 9:47 pm)
பார்வை : 127

மேலே