ஒரு மரம் வெட்டப்படுவதென்பது..! - பொள்ளாச்சி அபி.

தேசிய நெடுஞ்சாலையின்
ஓரத்தில் ஓங்கிவளர்ந்து
கிளை பரப்பி..நிழல் வளர்த்து
நின்றிருந்த மரம்..,

அரசின் ஆகப்பெரும்
இயந்திரக் கைகளினாலும்
அறுவைக் கருவிகளாலும்..
தோண்டப் பட்டிருந்தது..
துண்டாடப் பட்டிருந்தது நேற்று..!

இன்றுகாலை முதல்..,
இளநீர் விற்கும் மாறனையும்
கீரை விற்கும் பாட்டியையும்
கிளி ஜோசியக்காரனையும்
செருப்புதைக்கும் செல்லானையும்
இன்னுமிதுபோல சிலரையும்
காணவில்லை..!

கீற்றுவேய்ந்த சிறுகடையும்
பிச்சையெடுக்கும் வயசாளியையும்
வாங்குவோரும் போவோரும்..
வந்து அங்கே நிற்பவருமாக..
நேற்றுவரை பரபரப்பாக
இருந்த எதுவும் இப்போதில்லை..!

ஒரு மரம் வெட்டப்படுவதென்பது..
நிலத்தை மட்டும்
வெறுமையாக்குவதில்லை..சிலர்
வாழ்க்கையையும் தான்..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (27-May-13, 10:33 pm)
பார்வை : 207

மேலே