புறாக்கள் கற்பிக்கும் ஒற்றுமை!...நமது இன்றைய தேவை !
அடுக்கு மாடிக் கட்டிடத்தின் உச்சியில்
அழகுற அமர்ந்திருக்கும் வெள்ளைப் புறாவே ....!
சமாதானத்திற்க்கேன் உனைச் சமானமாய்ச் சொன்னார்கள்....?
அமைதிக்கேன் உன்னை அடைமொழியாக்கினார்கள் ...?
என் எண்ண ஓட்டம் நின்றது விடை கண்டு ...ஆம்
நீ உன் அருகிருக்கும் பல்வேறு நிறத் தோழர்களுடனும்
அன்புடன் கூடி உறவாடுகிறாய் ஒற்றுமையாய்.
தலைக்கனமில்லை கர்வமில்லை உங்களிடத்தில்
நிறவேற்றுமை உங்கள் ஒற்றுமையைக் கண்டுதான் ஓடி ஒளிந்ததோ......!
நீ உன் வெண்மை நிறத்தில் பல உண்மைகளை உணர்த்துகிறாய்.
ஆனால்.....
எங்கள் பழுதுநிறை மூளைகளில் தாம் அவை பதிவதாய் இல்லை.
அதனால்தான் நாங்கள் ஆளுக்கொரு இயக்கம் வைத்து
அணி அணியாய் வேறு பட்டு கூறு பட்டு
வேரறுந்த மரங்களாய் வலுவிழந்து நிற்கின்றோம் .....
அமைதியை நிலை நாட்டுகிறோம் என்பதன் அடையாளமாய்
அடிக்கடி விழா மேடைகள் தோறும் உன் கூட்டத்தினரைப்
பறக்க விடுகின்றோம் ......இவ்வாறு
அமைதியை உம்முடன் பறக்க விடுவதாலோ என்னவோ
அடுத்த நிமிடமே நாங்களிங்கு அடித்துக் கொள்கிறோம் ....!!
என்ன செய்வது எந்தன் மணிப்புறாவே...?
எனினும் நீ வருந்தாதே வண்ணப்புறாவே.....!
பழுதுநிறை மூளைகள் பழுதனைத்தும் நீங்கி
புதுப்பொலிவு பெறும் காலம் விரைவில் வரும் ...அதற்காய்
காத்திருப்போம் நாமிருவரும் கவின்புறாவே......!