வேடிக்கை மனிதர்கள்

நெளிவதும் ,பின்
நேராவதுமாய் போகிறது
அந்த ஒற்றையடிப்பாதை….

முன்னோர்கள் வாழ்ந்த
சுவடுகள் கொஞ்சம் கொஞ்சமாய்
மறைந்து போக
நவீனத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறது
அந்த மாட்டு வண்டிச்சாலை

வேலியும் ,மதிலுமென
எல்லையிடுகின்றனர்
அவரவர் வசதிக்கு

குடிபெருகிக்கிடந்த
அந்த அயலில்
எண்ணிறைந்த வீடுகள்
இல்லை இப்போது
யுத்தம் கலைத்துவிட்டது
கன பேரை !

மீளக்குடியமர்ந்த சிலரைத் தாங்கி
தன் இருப்பை
நிலைநிறுத்திக்கொள்கிறது
அந்த சமராவளவு

காலங்காத்தால ஒரு சத்தம் !
எட்டிப்பார்த்தால்
வாள்கள் ,பொல்லுகள் சகிதம்
இரு குழுக்கள்

"என் எல்லைக்குள்
உன்னை விடமாட்டன் "
என்றார் ஒரு பெரியவர்

"வெட்டடா !
அவனையும்,அந்த
வேலியையும் "
கத்தியது ஒரு
நடுத்தர வயதுக்குரல்

ஒவ்வொரு வெட்டிலும்
ஒவ்வொரு மரமாய்
சரித்துக்கொண்டிருந்தனர்
சில இள ரத்தக்காரர்கள்

வெட்டிய மரமொன்றில்
கட்டிய கூட்டிலிருந்த குருவி
கத்தியபடி பறந்து போய்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது
வேறொரு மரத்தின்
உச்சாணிக் கொப்பிலிருந்து
"மனிதச்சண்டை"யை

தன் கூட்டைக்கலைத்தவரை
குதற திராணியற்று .

எழுதியவர் : மு. யாழவன் (4-Aug-13, 8:24 pm)
பார்வை : 152

மேலே